dmk லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
dmk லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 அக்டோபர், 2015

முரசொலி மாறனோடு நான்

1973 ல் முரசொலி செல்வம் இல்லத்தில் முரசொலி மாறனோடு நான் எடுத்துக் கொண்ட படம்.திராவிட மாணவ்ர் முன்னேற்றக் கழக புதுவை மாநில அமைப்பாளராக இருந்த நான் முரசொலி மாறன் எழுதிய ஏன் வேண்டும் இன்பத் திராவிடம் நூலைப் படித்தது முதல் அவர் மீது தனிப்பற்று கொண்டவன்.

ஆயிரம் விளக்கில் இன்று பாரத ஸ்டேட் வங்கி உள்ள இடத்தில் முரசொலி பழைய அலுவலத்தில் சிறிய அறையில் ஏகப்பட்ட புத்தகங்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும் மாறன் அவர்களால் அமெரிக்க நூலகத்தில் உறுப்பின்னாக சேர்த்து விடப்பட்டேன்.புத்தகம் படிக்கும் பழக்கமே அவரைப் பார்த்துத் தான் எனக்கு ஏற்பட்டது. பீட்டர்ஸ் பிரின்சிபல் என்ற புத்தகத்தை எனக்கு அவர் பரிசளித்தார்.உள்ளுவதுள்ளும் உயர்வுள்ளல் வேண்டும் என்ற உணர்வை என்னுள் மூட்டிய புத்தகம் அது.அவர் அமைச்சராக இருந்த போதும் கடிதங்களுக்கு பதில் அளித்தார்.என் 25 வயதில் அவ்ரோடு எடுத்துக்கொண்ட படத்தை 68 வயதில் வெளியிட்டு பழைய நினைவுகளை பசுமையாக பாதுகாப்பதில் மகிழ்கிறேன்.


நந்திவர்மன்

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

ஈழத் தமிழரும் கோழைத் தமிழரும்!


ஈழத் தமிழரும் கோழைத் தமிழரும்!

(நம்நாடு வார ஏட்டில் 05.02.1978 ல் நந்திவர்மன் எழுதியது)

நீரோடை நிலங்கிழிக்க நெடுமரங்கள் நிறைந்து பெருங்காடாக்கப் பெருவிலங்கு வேரோடி வாழ்ந்திருந்த பாழ்நிலமாம் ஈழத்தைப் பண்படுத்திப் பழனங்களாகவும் பசுமை குலுங்கிடும் சோலைகளாகவும் மாற்றிக் காட்டிய தமிழன் வாழ்நிலம் இன்றி வதைபடுகிறான், வந்தேறு குடிகளான சிங்களவரிடம் உதைபடுகிறான். பாடு பெருக்கிப் பசுமை துலக்கிய தமிழன் வீடுவாசல் மாடு மனை துறந்து வேட்டையாடும் விலங்குமனத்தினரால் விரட்டப்படுகிறான். வேற்றினத்து வீணர்களால் மிரட்டப்படுகின்றான். பொற்புடைத் தமிழினப் பூங்கொடியர் கற்பினுக்கே இழுக்கு, அழுக்கு மனத்தினரால் நேரிடுகின்றது. போரிடும் பரம்பரைப் புலிகள் பூனைகளாய் பொறுமையோடு விழிநீரைப் பெருக்கும் நிலைமை நீடிக்கின்றது. எட்டி உதைக்கப்படும் தமிழனுக்காக இங்கிருந்து குரல் கொடுத்தால் தலையில் குட்டி உட்கார் என்று கூறுவோரே கோலோச்சுகின்றார். வேல் பாய்ச்சிய இதயவடுவதனில் நெருப்பள்ளிப் போடும் நீசரே இங்கு நாடாள்கின்றார். கோடிக்குலம் படைத்துப் பல்சமயக் கூறு அமைத்து ஓடிப் பொருள் திரட்டி உண்டுடுத்தி வாழ்வதுவே மெத்தச் சிறப்பென்று மேலான வாழ்வென்று இங்குள்ள தமிழர் சோம்பிக் கிடக்கின்றார். முத்தைத் துகள் மூடுவதாலே முத்தொளி சாம்புவவதிலலை. ஆனால் கத்துக்கடல் தாண்டி நாடுபல வென்ற தமிழர் உள்ளமோ கேடடொன்று தமிழினத்திற்கெனில் கூம்புகின்றதே ஒழிய குமுறவில்லை. கொடுமை வீழ்த்தும் கொடுவாளாய்க் கூனற்பகை மாய்க்க அடுபோர்க் களமேகும் வேகம் பிறப்பதில்லை. வீரமும் இருப்பதில்லை. நெஞ்சில் ஈரமும் இருப்பதில்லை.
மாற்றாரோடு பேரம் நடாத்தவும் மாற்றினத்தானிடம் சோரம் போகவும் தான் தமிழர்கள் இன்று தயாராக உள்ளனர்.
பொங்கு தமிழர்க்கொரு இன்னல் என்றால் வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் வெற்றித்தோளை உயர்த்தும் எண்ணம் வருவதில்லை. ‘சிங்களவன் செந்தாலும் சிந்துவேன் கண்ணீர்‘ செந்தமிழன் இறந்தாலும் சிந்துவேன் கண்ணீர் என்றிடும் வந்தேறு குடிகளேமனோகர மைனர்களாய் இம் மண்ணில் களைகளாய் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளனர். ‘சிங்களத்திலும் என் சினிமா பார்க்கும் சுவைஞர்கள் உண்டு. எனவே செந்தமிழர் இனப்பெண்டிர் கற்பிழந்து பொற்பிழ்ந்து கசக்கி எறியப்பட்டாலும் கதறிடேன்-மனம் பதறிடேன் என்றிடும் வீடணரே இங்கு அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஈடில்லாக் கற்பினுக்கு இலக்கணமாம் எந்தமிழ்க் குல மகளிரை நாடோடி மன்னன் ஒருவன்-தாசிகுலம் என்று பேசிய பின்பும் ஆட்சிபீடமேறும் காட்சியை பாழ்நிலமாம் பைந்தமிழகத்தில்தான் காணமுடியும். கணவனைத் தவிர கடவுளைக்கூடத் தொழேன் என்ற கண்ணகி வாழ்ந்த கன்னித் தமிழ் நாட்டில் கணவன் பேச்சையும் மீறி என் கண்ணசைவின் கட்டளையே ஏற்பர் என ஒரு மனிதர் கழறவும்- கழறிய மனிதர் ஏமாளித் தமிழரை ஏய்க்கும் கோமாளியாக அரசுக் கட்டிலேறவும் இங்குதான் முடிகின்றது.
இந்த நிலையிலும் தமிழரின் சொந்த மண்ணாம் தமிழகத்தில் வெந்த உள்ளத்தோடு வேற்று நாடுகளில் உதைபடுவோருக்காக- வதைபடுவோருக்காக ஆறுதல் கூற, தேறுதல் கூற - போர்க்குரல் எழுப்பிப் புவியாண்ட மரபின் வீரம் பட்டுப் போகவில்லை எனப் பாருக்கெல்லாம் பறைசாற்றிட ஒரே ஒரு அரசியல் இயக்கம் மட்டுமே உண்டு என்பதனை உலகத் தமிழர்கள் ஒப்பிவிட்டனர்-உள்ளத்தில் பதித்துக் கொண்டனர்.
அண்ணா வாழ்ந்த போதும்- அவர் நெஞ்சில் மட்டுமே வாழும் நிலை பெற்றபோதும் தி.மு. கழகம் மட்டுமே உலகத் தமிழரின் உரிமைப் போர்ப்படையாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. உள்நாட்டுச்சிக்கல் இதுவென்று கூறித்தலையிடாமைக்குக் கரணியம் கூறி வருவோர் பலருண்டு. வியட்நாமில் குழப்பம் என்றால் வீட்டுச் சுவர்களிலே வாசகங்களைத் தீட்டும் கம்யூனிஸ்டுக்கள் இலங்கைத் தமிழர் கலங்கித் தவிக்கின்றார் என்றல் கேளாக்காதினராக வாளா இருந்துள்ளனர். அரபு நாட்டவர்க்கு அல்லல் என்றல் ஆதரவுக் கரம் நீட்ட இங்கே ஆளுண்டு! அன்னைத் தமிழ் நிலத்தில்-தன் இனத்தவனுக்கு தரணியில் எங்கேனும் தீங்கென்றால் - தாங்கித்தானாக வேண்டும் தமிழன்! இது உள்நாட்டுச்சிக்கல் எனக் கையை உதறிவோரே இருக்கின்றனர். அண்மையில் உலகத்ó தமிழப் பண்பாட்டு இயக்கத்தவர்க்கு விருந்தளித்த நடிகர் இராமச்சந்திரன் இலங்கைச் சிக்கல் உள்நாட்டுச் சிக்கல்-என்னால் ஏதுஞ் செய்ய இயலாது என்று கையை விரித்த காட்சியை உலகத்தமிழப் பிரதிநிதிகள் கண்டனர்! கண்டதன் பயனாய் இராமச்சந்திரனை இனங்கண்டு கொண்டனர். இராமச்சந்திரனுக்குப் பேரறிஞர் அண்ணாவின் கருத்துக்கனை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
"தமிழகத்திலிருந்து சென்ற தமிழினத்தாரைச் சிங்களவர் அழித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் வஞ்சகமாக ஈடுபடும்போது அதை உள்நாட்டுச் சம்பவம் என்று விட்டுவிட முடியுமா? கணவனும் மனைவியும் வீட்டுக்குள் அமைதியாக வாழ்வு கடத்துகிறபோது - கொஞ்சிக் குலாவுகிறபோது அங்கு பக்கத்து வீட்டுக்காரனுக்கு வேலை இல்லை. ஆனல், மனைவியின் கழுத்தை அறுக்கக் கணவன் கொடுவாள் தூக்கிவிட்போது - அதைக் கண்ட மனைவி ஐயோ! ஐயோ! என்னைக் காப்பபற்ற யாருமில்லையா? என்று அலறுகிறபோது அது வீட்டு விஷயமாகாது; பக்கத்து வீட்டுக்காரன் பாய்ந்துதான் தீரவேண்டும்" என்று பேரறிஞர் அண்ணா அறிவுறுத்திச் சென்றுள்ளார்.
அணுக்கத் தொண்டர்களாய் அண்ணனோடு இருந்தவர்க்குத்தான் நுணுக்கமாக அண்ணா சொன்னதன். உட்பொருள் புரியுமே தவிர, எப்போதாவது முகத்தைக் காட்டிவிட்டுப் போகும் இராமச்சந்திரர்களுக்குப் புரிய முடியாது. அண்ணன் வழி நடப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்க்குத்தான் அண்ணன் மொழி புரியுமே தவிர-ஊரை ஏமாற்ற உறவு வேடம் போடும் பொய்யின் மைந்தர்க்குப் புரியவே புரியாது. அண்ணன் சொன்னதையே அறியாத நடிகருக்கா அருந்தமிழர் வரலாறு புரியப் போகிறது? சிங்களவரின் முதல் மகனை விஜயன் எழு நூறு வீரர்களோடு ஈழத்திரு நாட்டில் கி.மு. ஐந்து, ஆறு நூற்றண்டுகளில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னால், நாகர்கள் என்றும் கூறப்பட்ட குடிகள் அங்கு குடி இருந்தனர் என்று சிலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ், பரணவிட்டண்ணா "ஆரியக் குடியேற்றங்கள்; சிங்களவர் " என்ற ஆங்கில நூலில் எழுதுகின்றார்.
"சிறீலங்கா அரசியல் 1947-73வரை " என்ற நூல் எழுதிய பேராசிரியர் ஜெயரத்தினம் வில்சன் என்பார் முதல் முதல் ஈழத்தில் குடியேறியோர் திராவிட இனத்தவரே என்று பலரும் கருதுவதாக எதியுள்ளார்.
வரலாற்றுக் காலத்திற்கு முன் பிருந்தே ஈழத்தில் திராவிடஇனத்தவரின்குடியேற்றம் நிகழ்ந்துழூ வந்தாக ‘பாஷ்யம் எனும் அறிஞர் கருதுகிறார்.
ஈழநாட்டு வரலாற்றசிரியர்களுன் முதன்மையாக இப்பகுதில் வைத்துக் குறிப்பிட்டுகவரான ஜி. மெள்னி என்பார். விஜயன் வருவதற்கு முன்பாக வட்டர்கள் என பழங்குடிகளே ஈழத்திபரந்து வாழ்த்தனர். இவர்கள் கடற்கோளால் தாயகத்தில் இருந்து இலங்கைத் தீகளாக பிரிக்கப்படுவதற்கு முன்பாகத் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைத் தீவு வந்தனர்கள் என்று திட்டவட்டமாக எழுதியுள்ளார்.
உலகின் முதல் தாய்மொழி தமிழ் என்ற பேருண்மை இன்னமும் அறிவாளர்க்கு சரியாக புலனனாமல் இருந்து வருகிறது. மொழி ஞாயிறு தவநேயப்பாவாணர் உலகம் முதல் உயர்தனிச் செம்மொழி என்ற தம் ஆங்கில நூலில் ஆணித்தரமாக நிறுவிய உண்மையை உலகம் ஒப்பும் நாள் தொலைவில் இல்லை. உலகின் முதல் மொழியைப் பேசிய முதற் குடிமகனான தமிழின ஈழத்தில் முதன்முதல் குடியேறியவன் என்பதற்குச் சான்னுதேடி அலையத் தேவை இல்லை என்றாலும் சிங்களவரும் மேனாட்டாரும் செப்பினால் தான் தமிழரில் சிலர் ஒப்புவர் என்பதால்தான் அவர்கள் மேற்கோளைத் தர நேர்ந்தது ஈழத் திருநாடு சிங்களவர்குடியேறிய பூமி! இன்பத் தமிழர்கள் வரலாற்றுக்கு முன்பே வாழ்ந்த நிலம்! சென்ற நாடு - தமிழரசர் வென்றவர் நாடுகளை-தமிழரே ஆளும் நிலை ஏற்பட்டிருந்தால் உலகத்தில் தமிழினத்தின் ஒங்குபுகமுக்கு ஒரு குறையும் நேர்ந்திருக்காது.
அன்றிருந்த மன்னர்கள் ஆதிக்க எண்ணமின்றி அடுபகைத்துடுக்கடக்கி அன்னை நிலம் மீண்டிட்டடார். நேடியோனை என்னும் பாண்டியன புறநாறூற்றில் "மூந்நீர்விழவின் நெடியோன் " என்று கூறப்படுகின்றான். கீழ்த்திசைநாடுகளை வென்று மீண்ட பின்னர் கடலிற்கு நன்றிகூறும் முகத்தான் இந்தப் பாண்டியன் விழா வெடுத்தானாம் விழா எடுத்து வீணாய்ப் போனவர்கள் தமிழர்கள். வெளி நாடுகளில் தமிழினத்தின் ஆட்சியை வேரூன்றி இருந்தாலும் இன்று அலையெல்லாம் தமிழ்பாடும் - அயல் நாடுகள் தமிழ் பேசும் - அவனியிலே தமிழொன்றே அரச மொழி என்றிருக்கும் நிலை மலர்ந்திக்கும்.. குலையெல்லாம் நடுங்கி இங்கே குள்ளநரிகள் ஒடி நிற்கும். குவலயமே தமிழ் கூறும். மலையெல்லாம் மண்ணெல்லாம்-மன்னு நதி கடல் எல்லாம் மாத்தமிழர் புகழொழிக்கும் மர்ப்புகழை இழந்து விட்டோம்.
கீழ்த்திசை நாடொன்ரை வென்று அதற்கு மையமாக கடற்கரைப் பாதைஒன்றில் தன் அடிச்சுவடுகள் பொறித்து அவற்றைக் அலைகளை கழுவிடுமாறு செய் தான் வடிவலம்ப நின்ற பாண்டியன். இன்று தமிழன் கண்ணீரால் சிங்களவனின் கால்கழுவிச் கொண்டிருக்கிறான். இங்கோ மாற்றனுக்கு மண்டியிட்டுச் கொண்டிருக்கிறான்.
இமயத்தின் வெற்பினிலே கொடி நட்டான் சேரன் குட்டுவன் என்று பெருமைப் படுகின்றோம். கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றினான் என்று களிக்கின்றோம். ஆனால் செங்குட்டுவன் மாடலன் என்னும் பிராமணனுக்கு 50 துலாம் பொன் கொடுத்ததையும் கொடுங்கோளூரில் வேள்வி நிகழ்த்திய அடிமைத்தனத்தையும் எப்படிமறத்தற்கியலாதோ அவ்வாறே வென்ற நாட்டை ஆண்டிட வழி செய்யாத பழியும் பெரும் பழியே! இத்துகு மன்னர்தம் மெத்தனத்தால் தமிழினமே அடிமைப்பட்டுவிட்டது. வேற்று நாடுகளில் இருந்து தமிழர் விரட்டப் படவும் - தமிழர் நாட்டில் வேற்றினத்தார் அரசோச்சவுமான அவலநிலை ஏற்பட்டு விட்டது.
ஈழத்தின் முதல் குடிகள் என்று சொல்லப்படும் நாகர்கள் யாரென்பதற்கு மொழி நூலறிஞர் தேவநேயப் பாவாணர் நல்ல விள்ககம் நல்கியுள்ளார்.
கீழ்த்திசை நாட்டார் நாக வணக்கமும் - நாகமுத்திரையும் கொண்டிருந்தனால் நாகர் எனப்பட்டார். அவர் நாடு நாகநாடு எனப்பட்டது. அவருள் நாகரிகமும் அநாகரிகமுமாக இருசார் மாந்தரும் இருந்தனர்.
வங்கக் கடல் தோன்று, முன்னர் அங்கிருந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மாந்தர், கீழைக்கரை நெடுகிலும் குடியேறியதனால் அவர் சேர்ந்த ஊர்கள் நாகர் கோயில், நாகூர், நாகப்பட்டினம், நாகபுரி எனப் பெயர் பெற்றனர்" என்று தேவநேயப் பாணவார் தெளிவுரைப்பார்.
பழந்தமிழ்க்குடிகளான நாகரின் நாட்டைத்தான் வந்தேறு குடிகளான சிங்களவர் கைப்பற்றினர். அப்படிக் கைப்பற்றிய காலத்தும் ஈழத்திருநாட்டின் முழு ஆதிக்கமும் சிங்களவர் கைக்குச் சென்றிட வில்லை. தமிழர்கள் சிங்களவருடைய ஆட்சியின் கீழó அடிமைப்படுத்தப்படவில்லை.
அக்பரின் காலடி படாத நாடாக-அசோகனின் ஆட்சிபரவாத நாடாக அன்னைத் தமிழ்நாடு இருந்ததுபோன்றே சிங்களவரின் ஆளுமையின் கீழ்சிறைப்படாத நாடாகவே தமிழ்ஈழம் óஇருந்து வந்துள்ளது.
16-ம் நூற்றண்டில் இலங்கையின் கடற்கரைப் பகுதிகளைப் போர்ச்சுகிசியர் கைப்பற்றினர்கள். அதன்பின் டச்சுக்காரர்கள் வந்திறங்கினர். அடுத்துவந்த ஆங்கிலேயர்கள் 18-வது நூற்றண்டின் தொடக்கத்தில்தான் இலங்கைத்தீவு முழுமையும் ஓரரசின் கீழ்-ஒரு குடையின் கீழ் கொணர்ந்தார்கள்.
எப்படி இந்தியத் துணைக்கண்டம் வெள்ளையர் வருகைக்குப் பின்னரே ஒரு நாடாக உருவாயிற்றோ அவ்வாறே இலங்கைத் தீவும் வெள்ளையரால் தான் ஓரரசிற்குட்பட்ட ஒரு நாடாயிற்று.
நரிக்கொரு புதர் உண்டு. புலிக்கொரு குகை உண்டு. பாம்புக்கும் புற்று உண்டு. குருவிக்குக் கூடு உண்டு. தமிழனுக்கொரு வீடு நாடு வேண்டாமா? என்ற அடிப்படைடியில் அல்ல இலங்கைத் தமிழர் தனிநாடு கோருவது.
இருந்த நாட்டை - இழந்த நாட்டை - உரிமையோடு கேட்கிறார்களே ஒழிய வேறல்ல; இதுவும் வேறு வழியே இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பின்னர் தான் கேட்கிறர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
மாநில சுயாட்சி மறுக்கப்பட்டு, தமிழினத்தை அழித்தொழிக்கும் திட்டமிட்ட இன வெறிப்போக்கு மேலோங்கிய பின்பே விடுதலைக் கோரிக்கை வெடித்தது. மொழியுரிமை மறுக்கப் பட்டு, இரண்டாந்தர குடிமக்களாகத் தமிழர்கள் முடக்கப் பட்ட பின்னரே விடுதலை எண்ணம் துளிர்ந்தது. தொடர்ந்து இனக்கலவரம்-தமிழர் உயிர் உடமை கற்பு பறிப்பு என்பன நிகழ்ந்து வருவதால்தன் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் என்ற அளவில் தமிழ் ஈழம் கோரி வருகிறார்கள்.
பேசித் தீர்த்திருக்க வேண்டிய பிரச்சினையை இவ்வளவு பெரிதாக முற்றவிட்டது சிங்களவரின் இனவெறியே! அறிவுடைமையோடு இனித் தொழிற்பட்டு இதனைத் தீர்ப்பதும் தீர்ககாததும்சிங்கள அரசின் கையில் இருக்கிறது. உலகாண்ட இனத்தை ஒடுக்கி அடக்கி சிங்களவன் வாழமுடியாது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் தமிழன் குமுறி எழுந்திருக்க மாட்டான்.
அடுக்கடுக்காக அல்லல்களைச் சந்திக்கும் தமிழினம் இவ்வாண்டு சோதனைக்காளான நேரத்தில் "உலகத் தமிழர்களின் முதல்வர் " என ஈழக்கவிஞர் இளங்கோவால் பாராட்டப்பெற்ற தமிழினத் தலைவர் துடித்தெழுந்தார். கனக விசயர் முடித்தலை நெறித்த தமிழினத்ததார்க்கு இன்னலா என்று எழுச்சிக் குரல் கொடுத்ததார். தமிழகமாளும் துரோகிகள் கூடாது கூடாது இது உள்நாட்டுச் சிக்கல் தி.மு. கழகம் பேரணி நடத்தத் தேவையில்லை என ஊர் தோறும் கூக்குரல் எழுப்பினர்கள்.
வரலாற்றை மறந்துவிட்டவர்களே! 1961 மே 9-ம் தேதியன்று இலங்கை ஆட்சியின் மொழிக்கொள்கை குறித்தும், அதன் பயனாய்த் தமிழர் அடையும் அல்லல்கள் குறித்தும், சிங்கள வெறியர்கள் செந்தமிழர்க்கிழைத்த அட்டூழியத்தைக் கண்டித்தும் சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் கட்டளையேற்றுப்பேரணி நடத்தியதை மறந்துவிட்ட மகாபாவிகளே! அண்ணாவின் பெயரால் அரசியல் அங்காடி நடத்தும் அற்பர்களே! கலைஞர் செய்வது அத்தனையையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்ற காழ்ப்பின் அடிப்படையில் கண்டித்த நடிகர் கட்சிக்காரர்களே! அண்ணா செய்ததை அண்ணாவின் உண்மைத் தம்பி கலைஞர் செய்தார்! நீங்கள் அலறினீர்கள். யாரென்றும் இனம் காட்டிக் கொண்டீர்கள்.
கறுப்புப் பணத்தால் மத்திய அரசின் சீற்றத்திற்கு ஆளாவோம் என்று மௌனம் சாதித்தீர்கள்! உங்கட்கு இன்னொன்றையும் நினைவூட்டுவேன். அப்போதைய இலங்கை அரசு தி.மு. கழகப் பேரணி குறித்துத் தனது எதிர்ப்பை மத்திய அரசிற்குத் தெரிவத்தபோது இந்தியப் பேரரசு என்ன பதில் சொல்லிற்று தேரியுமா?
"தி.மு. கழகம் காங்கிரசுக்கு எதிராக இயங்கும் ஒரு அரசியல் கட்சி " உண்மையில் அதன் நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது. ஒரு சுதந்திர நாட்டில் எழுத்து- பேச்சுரிமையும், எந்தத் தனி இயக்கத்தைத் தோற்றுவித்து நடாத்திவரும் உரிமையும் உள்ளதால் ஒருவர்தான் எண்ணியதை எடுத்துரைக்க முடியும்! தடுக்க முடியாது! என நேரு அரசு நவின்றதை நாடோடிகள் அறிந்திருக்க மாட்டார்கள். இப்போதுள்ள சனதா அரசும் சனநாயக - மனிதாபிமான உணர்வுகளை மதிக்ககூடியது. என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இருந்தும் ஏனோ வாளா இருந்தனர் தமிழினத் துரோகியர் தானாடாவிடினும் சதையாடும் என்ற மொழி இவர்கட்குப்ó பொருந்தாது. ஏனெனில் இவர்கள் இனத்துரோகிகள்!.
இத்தகு துரோகியரை உலகத் தமிழர்கள் என்றோ புரிந்து கொண்டுவிட்டார்கள். இலங்கைக் கவிஞர் இளங்கோ பாடினர் "அண்ணாவின் தம்பிகளே...... மண்ணா கேட்கிறோம்? மடி நிறைய பொன்னா கேட்கிறோம்? எமை எண்ணா திருக்காதீர் அதுவே போதும் " என்று பாடினர் அண்ணாவின் தம்பிகளாய் நடித்துக் கொண்டிருப்போரே.......உம்மை எண்ணித்தான் ஈழக்கவிஞர் இடித்துரைக்கிறரே தவிர, இலங்கைத் தமிழர்க்காகத் துடித்தெழுந்த தி.மு.கழகமாம் அண்ணாவின் உண்மைத் தம்பியர் பாசறையை அன்று.
ஈழத்தமிழர் இன்னல் போக்க இங்குள்ள கோழைத் தமிழர் வீரம் பெற்றுக் கோமாளிகளை நம்பி ஏமாளிகளாகும் மயக்கத் தினின்று விடுபட்டு உலகத் தமிழரே ஒன்று படுங்கள் என்று குரலெழுப்பும் காலம் வந்தாக வேண்டும். அத்தகு காலத்தைக் கலைஞரின் சுட்டுவிரல் காட்டும் பாதையில் தேடிப் போகும் தி.மு.கழகம் வென்றாகவேண்டும்! வரலாற்றில் நின்றாகவேண்டும்.

அண்ணா நினைவேந்தல் பொழிவு



அண்ணா நினைவேந்தல் பொழிவு

நா. நந்திவர்மன், பொதுச்செயலாளர் திராவிடப் பேரவை
புதுச்சேரிப் பல்கலைக் கழகம், சுப்பிரமணிய பாரதி தமிழ்மொழி இலக்கிய உயராய்வு நிறுவனம் 5.10.2000 த்தில் நடத்திய தமிழக அரசு அமைத்துள்ள அறிஞர் அண்ணா அறக்கட்டளைச் சொற்பொழிவில் தலைமையுரை
அறிஞர் அண்ணா வாழும் காலத்தில் மட்டும் அல்ல. மறைந்த பின்னரும் சாதனைகளைச் செய்து காட்டியவர். சாகாப் புகழையீட்டியவர் அவர் மறைவுக்கு:
எண்ணா யிரங்கோடி உள்ளமும் ஆவியும் ஏக்கமுற்றும்
பண்ணா யிரங்கோடி பாடி வருந்திப் பரிதவித்தே
உண்ணா துறங்கா துழன்றதும் மாண்டதும் உண்மையென்றால்
அண்ணா துரையாம் அறிஞர் புகழ்க்கோர்அளவுமுண்டோ?
என்று பைந்தமிழ் வாழுலகின் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடினார்! அண்ணா மறைவுக்கு வாடினார்.
அறிஞர் அண்ணாவின் மறைவு உலகிலேயே பேரளவில் 15 மில்லியன் மக்கள் பங்கேற்றமைக்காக Guinness Book of World Records களில் இடம் பிடித்தது. அவர் மறைவன்று நானெழுதிய கவிதை பல்லாண்டுகள் கழித்து 1976 பிப்பவரி 3 அன்று முரசொலியில் நெருக்கடி நிலையில் வெளியாயிற்று.
"விழிநீராலே நோயினையே விரட்டுதல் முடியுமென்றால்
வேண்டுமட்டும் சொரிந்திருப்பேன், வியன்தமிழில்
கவிதைகளைப் பொழிவதனால் பிணிக்கொடுமை போமென்றால்
கோடிகோடிப் பாடல்களைக் குவித்திருப்பேன், பாசமிக்க அண்ணனையே
அழிவினின்று காத்திடவே அளித்திடுக உயிரென்றால்
அகமகிழ்ந்து அளிதிருப்பேன் அவன்நோயை எனக்களிக்கும்
வழியிருந்தால் பெற்றவனை வாழ்ந்திருக்கச் செய்திருப்பேன்.
வழியில்லை அழிந்துவிட்டான், வார்த்தையின்றி தவிக்கின்றேன்."
என்று அவர் மறைவுக்கு மொழியிழந்து விழித்தேன். விழிநீரை வடித்தேன். நாடெங்கும் அவர் சிலைகள், நாள்தோறும் அவர் பெயரில் புதிய புதிய கட்சிகள், வங்கக் கடலோரமென வருணிக்கப்படும் தங்கத்தமிழர் கடலருகில் அவர் கல்லறை! அதை கோயிலாக்கிச் சூடம் ஏற்றும் சுயமரியாதைச் சுடர்கள்.
எண்ணாயிரம் கோடித் தமிழ் உள்ளங்களில் அன்றிருந்த என் தலைவன் கொடிகளிலே படமாக அசைந்தாடுகின்றான். முச்சந்திகளிலே காக்கைகளின் எச்சில் மழையில் நனைந்து கதிரவனின் வெப்பத்தால் கருகி மெருகிழந்து நிற்கின்றான்.
ஆனால் இந்த கணினி யுகத்தில் உலகளாவிய வலைத்தளங்களில் அண்ணாவைப் பற்றி விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவுகளே உள்ளன. அந்த பதிவுகளை செய்த ஒரு சிலராவது அண்ணாவை மறவாதிருப்பது மனத்துயருக்கு மருந்தாகிறது. அவரின் கொள்கைகளை குப்பையிலே வீசிவிட்டு அவரின் கருத்துக்களை கண்டும் காணாமல் சீர்குலைந்து சிறுமைப் படுத்தி தங்களை முன் நிறுத்துவதில் சிலர் வெற்றி கண்டுள்ளனர்.
அண்ணா எண்ணிய தமிழின ஒருமைப்பாட்டுணர்வு முன்னிலைப்படுத்தப் படவில்லை. அவரின் பகுத்தறிவுப் பயணத்தை திசைமாற்றியவர்கள் பக்தர்களாக வேடம் கட்டுகிறார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் அறிஞர் அண்ணாவை எண்ணி வியக்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
அந்த தமிழர்களை தமிழ்த்தேசம் என்ற உலகளாவிய வலைப்பின்னல் தொகுப்பு நமக்கு அடையாளம் காட்டுகிறது.
அண்ணாவின் பரம்பரை என்பது ஆரியமாயைக்கு அடிமையானவர்கள் அல்ல. அண்ணாவின் வழியினர் என்பது கம்பரசம் பருகி போதையில் ஆழ்ந்து புத்தியை தொலைப்பவர்கள் அல்ல! மாஜி கடவுள்களை எழுத்தால் அடையாளம் காட்டிய அண்ணாவின் பிறங்கடைகள் மூகாம்பிகைகள் முன்பு மூங்கையினர் ஆயினர். பணத்தோட்டம் தீட்டி பொருளியல் சுரண்டலைச் சாடி அண்ணா பெயரால் ஆட்சிகளில் அமர்ந்தவர்கள் பன்நநட்டு நிறுவனங்களுக்கு பல்லக்கு தூக்கினார்கள். தீ பரவட்டும் என மடமை இருளைச் சுட்டெரித்த மாமேதை பெயரால் அரசியலில் அங்காடிகள் திறந்தவர்கள் மூடப்பெருநெருப்பில் குளிர் காய்ந்து மஞ்சள் வண்ணங்களில் மங்கலம் தேடினார்கள். கறுப்பை சிகப்பை, கழகங்களின் உயிர்த்துடிப்பை, நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவரெனப் பெரியாரைப் போற்றிய பேரறிஞரின் கொள்கைப் பிடிப்பை குலைத்தார்கள். ஆனால் சப்பான் நாட்டில் வாழும் Sacho Sri Kantha தனது Anna’s Legacy மூலம் யார் அண்ணனுக்கு ஏற்ற தம்பியர் என அனைத்துலகுக்கும் அடையாளம் காட்டுகிறார். அண்ணாவின் கொள்கைகளை தமிழ்நாட்டுத் தம்பியர் மறந்தாலும் இருக்கிறார் ஈழநாட்டுப் தம்பியர் இனமானங்காக்கவென்று நம்பிக்கை ஒளியை நம்நெஞ்சில் பாய்ச்சுகிறார்.
"If Anna’s Dravidian Nationalism has to be counted as a failure, then the Gandhian, Rooseveltian and Leninist - Stalinist ideals also have met the same fate in their places of origin. However, Gandhian ideals were picked up by Martin Luther King Junioor in America and these led to advancement of civil rights for Blacks in the 1960s. The liberal - democratice ideals of Roosevelt got rooted (however imperfectly) and supplanted the existing feudalistic social arrangement in Japan. Even the Leninist - Stalinist ideals found roots in Cuba under the leadership of Fidel Castro in 1959 and is still not supplanted, despite aggressive bullying by Yankee capitalism Similarly, though Anna’s ideology of a ‘Separate state for Tamil’s became a lost cause in India, it did become a rallying cry for the younger generation of Eelam Tamils in mid 1970s. Thus, Anna’s legacy lives in Eelam."
அண்ணாவின் திராவிடத் தேசியம் தோல்வியடைந்தது என்று கணக்கிடப்பட்டால், காந்திய, ரூசுவெல்டிய, இலெனின் , இசுடாலினிய கொள்கைகளும் தோன்றிய மண்ணில் தோல்வியையே தழுவியுள்ளன. ஆனால் காந்தியக் கொள்கைகள் மார்டின் லூதர் கிங்கால் அமெரிக்க நாட்டில் கைக்கொள்ளப்பெற்று 1960 களில் கறுப்பரின மக்களின் வாழ்வியல் உரிமைகளை வென்றெடுக்கப் பயன்பட்டன. ரூஸ்வெல்ட் அவர்களின் தாராள மக்களாட்சிக் கோட்பாடுகள், சப்பானில் நிலவிய நிலப்பிரபுத்துவச் சமுதாய ஏற்பாட்டை பெயர்த்தெடுத்து அதற்குப் பதில் நிலை பெற்றன. இலெனினிய இசுடாலினிய கொள்கைகள் 1959 அளவில் பிடல் காசுடிரோ தலைமையில் கியூபாவில் வேரூன்றின. அமெரிக்க முதலாளியம் அதிதீவிர நெருக்குதல் தந்தும் இன்றளவும் அப்புறப்படுத்தப்படாமல் கியூபாவில் நிலைபெற்றுள்ளன. அதே போல் தமிழர்களுக்கென்று தனித்தாயகம் வேண்டும் என்ற அண்ணாவின் வேணவா இந்தியாவில் நிறைவேறாமல் போயிருப்பினும் 1970 களில் ஈ£த்தமிழரின் இளைய தலைமுறையினரை ஒருங்கிணைக்கும் மையமாக மலர்ந்தது! இவ்வாறே அண்ணாவின் பாரம்பரியம் ஈழத்தில் வாழ்கிறது." என்கிறார் அக்கட்டுரையாளர்! 20 ஆம் நூற்றாண்டின் ஒரு நூறு தமிழரை இனங்காட்ட உருவான வலைத்தொகுப்பின் உட்பிரிவு இக்கட்டுரையை தாங்கி வெளிவந்துள்ளது.
10.9.2000 அன்று கணினி வழியே கவின் தமிழை வளர்க்க ஆற்றத்தகு கடமைகள் பற்றிய கருத்தரங்கில் மூவாயிரம் பக்கங்களை கொண்ட தமிழ் வலைத்தொகுப்பில் அறிஞர் அண்ணாவிற்கு தனியாக வலைத்தளம் இல்லை என நான் வருந்தி இருந்தேன். இதனை தமிழ்த்தேசம் வலைத்தொகுப்பு tamilnation.org என்ற முகவரியில் Tamil and Digital Revolution உட்பிரிவில் முழுமையாக வெளியிட்டுள்ளனர்.
உலகளாவிய வலைப்பக்கங்களில் அண்ணாவை எந்த ஒரு தேடுபொறி மூலம் தேடினாலும் தமிழ்த்தேசம் வலைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரையே கண்முன் தோன்றுகிறது. அதிலே சப்பான் நாட்டு தமிழ் அறிஞர் கட்டுரையை தவிர்த்து அறிஞர் அண்ணாவைப் பற்றி இன்னும் ஒரு கட்டுரை உள்ளது. அதை எழுதியவர் இன்று அண்ணா பெயரால் அரசியல் அங்காடிகளை வெற்றிகரமாக நடத்துவர் வரிசையில் இடம்பெற்றவர் அல்ல. ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுக்கு திரு. ஏ.பி. சனார்த்தனம் எம்பி. 1981 இல் எழுதிய கட்டுரை அது.
அண்ணாவை இழந்து பெருஞ்சித்திரனார் பாடியவாறு எண்ணாயிரம் கோடி உள்ளம் அழுததே, அவர்களில் அண்ணாவின் புகழை வலைத்தளங்களில் நிலைநிறுத்த தொலைக்காட்சிகளில் அண்ணாவின் கொள்கைகளுக்கு குரல் கொடுக்க, ஆட்கள் அருகிவிட்டனர் என்பது வெள்ளிடமலை.
தொலைக் காட்சிகளை அறிவியல் தமிழ்க்குப் பயன்படுத்தாமல் தமிழ்ச் சமுதாயத்தை சினிமா நடத்தப்பெறுகிறது. அதில் சி.என். அண்ணாத்துரை அவர்களின் வாழ்க்கை வரலாறும் இலக்கிய படைப்புகளும் என்ற வலைப்பக்கங்களின் என்ன கூறப்பட்டுள்ளது?
வாழ்க்கை வரலாறு 1909 செப்டம்பர் 15 அன்று காஞ்சிபுரத்தில் திரு. நடராசன் பங்காரம்மாளுக்கு மகனாக ஒரு நடத்தரக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று பி.ஏ. (ஆனர்சு) பட்டம் பெற்றார். "சென்னை கோவிந்தப்பன் பள்ளியில் இருந்த போதே அரசியல் ஈடுபாடு." ஈ.வே. இரா. (இராமசாமிப்பெரியார்) பற்றாளராகி நீதிக்கட்சியில் சேர்ந்தார். (இது 1944 இல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது). குடியரசு ஏட்டியில் துணையாசிரியராக பணியாற்றினார். 1942 திராவிட நாடு தமிழ் வார ஏட்டை துவக்கினார். 1949 தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் 15 இடங்களை திராவிட முன்னேற்றக் கழகம் வென்றது. அண்ணா எதிர்கட்சி தலைவர் ஆனார். 1959 உள்ளாட்சி தேர்தல்களில் தி.மு.கழகம் அதிக இடங்களை வென்றது. 1962 மாநில சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் 138 இடங்களை வென்று மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்றது. அண்ணா முதலமைச்சர் ஆனார். 1968 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். 3பிப்ரவரி 1969 புற்றுநோயால் இறந்தார்.
பெருவாழ்வு வாழ்ந்த அந்த பேரறிஞர் பற்றிய வாழ்க்கை பதிவு இவ்வளவுதான் அதற்காக வருத்தப்படுவதா? இல்லை அண்ணாபெயரை தினம் சொல்லும் ஆளும், எதிர்க்கட்சிகளும் செய்யாத ஒரு வரலாற்றுப் பதிவை இந்த மட்டுமாவது செய்தனரே என தமிழ் மின்னியல் நூலகத்தாரை பாராட்டுவது தெரியவில்லை. அடுத்தபடியாக சில வரிகளே சொல்லப்பட்டுள்ளன. அந்த வரிகளை மேற்கோள்காட்டக்கூட நம்மால் முடியாது. படிஉரிமைச் சட்டப்படி இன்தாம்காம் ஒப்புதல் பெறாமல் ஒரு வரிகூட நாம் எடுத்தாள முடியாது.
அண்ணாவை உரிய முறையில் பதிவு செய்ய திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல நான் பொதுச் செயலாளர் ஆக உள்ள திராவிடப் பேரவையும் தவறிழைத்து தமிழ்ச் சமுதாயத்தின் முன்னால் குற்றவாளிக்கூண்டில் நின்றுகொண்டு இருக்கிறோம்.
வலைத்தளங்களில் அண்ணாவின் நூல்கள், பாராளுமன்ற சட்டமன்ற பேச்சுக்கள் முழுமையாக பதிவு செய்யப்பட வேண்டும். அண்ணாவைப்பற்றிய ஆய்வுகள் தொகுப்படவேண்டும். அரசே அண்ணாவின் முழுத்தொகுதிகளை வெளியிடவேண்டும் இல்லையேல் பல்கலைக்கழகங்களாவது இதை பதிப்பிக்க வேண்டும் வலைத்தளங்களில் ஏற்றவேண்டும். முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்வோர் வலைதளங்களில் அண்ணா உள்ளிட்ட தமிழ் அறிஞர் மற்றும் தமிழ் இலக்கியப் பதிவுகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகங்களில் ஆற்றிய பேருரைகள் இன்றும் தமிழர் நினைவு கூறத்தக்கவை. நிலையும் நிணைப்பும் என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா அந்நாளில் பேசியதில் சில "தமிழ்நாட்டில் குடியேறிய ஆரியர்கள் தமிழர்களை பார்த்து என்ன எண்ணியிருப்பார்கள் பச்சைப் புற்றரைக்கும பஞ்சமான நாட்டில் இருந்து வந்தவர்களின் மனதிலே தமிழ் நாட்டிலே உள்ள மாந்தோப்புகளும். மண்டபங்களும், சாலைகளும், சோலைகளும், குன்றுகளும், கோபுரங்களும், வாவிகளும் வயல்களும், எத்தகைய எண்ணங்களை தந்திருக்கும்? நிச்சயம் தமிழர்களைப் பார்த்து கேட்டு இருப்பார்கள் மெல்லிய அடையணிந்து இருக்கிறீர்களே அது ஏது என்று? தமிழர்கள் அது எங்கள் கைத்திறமை இந்திரன் தந்த வரப்பிரசாதம் இல்லை என்ற கூறியிருப்பார்கள். இமையம் வரை சென்று உங்களது இலச்சினையை பொருத்திருக்கிறீர்களே அது எப்படி என்று கேட்டு இருப்பார்கள். அதற்கு தமிழர்கள்அது கருவாழ்வார் கபாட்சத்தால் அல்ல! எங்கள் தோள் வலிமையினால் என்று கூறியிருப்பார்கள். இன்றும் உங்களது இசையின்பமாக இருக்கிறதே அது எப்படி என்ற ஆரியர்கள் தமிழர்களைப் பார்த்து கேட்டிருப்பார்கள். அதற்கு தமிழர்கள் நாரதர் மீட்டிடும் தேவகானம் அல்ல! நாங்கள் கண்டு பிடித்த யாழின் தன்மையது என்று கூறியிருப்பார்கள். மீண்டும் அந்த யாழ் ஏது? என்று கேட்டிருப்பார்கள். அது திருப்பாற்கடலில் கடைந்தெடுத்தது அல்ல என்று கூறியிருப்பார்கள். ஆரியர்கள் முத்தைப்பார்த்து அது என்ன என்று கேட்டிருப்பார்கள் அது தேவலோகச் சரக்கல்ல! எங்கள் தீரர்கள் கடலில் மூழ்கி கண்டெடுத்த முத்து என்று கூறி இருப்பார்கள். தமிழர்களின் அந்தக் காலநிலை அவர்களுக்கு அத்தகைய நினைப்பைத்தான் தரும் என்று பழங்காலத் தமிழகத்தை ஏக்கத்தோடு படம் பிடித்தார் அண்ணா.
இக்காலத் தமிழகத்தை அண்ணா படம் பிடிக்கிறார்.
"விஞ்ஞானம் இந்த நாட்டில் மதிப்பற்று இருப்பது போல வேறு எந்த நாட்டிலும் மதிப்பற்று இருக்காது. நான் இதோ பேசுகிறேன், என் முன் ஒலிப்பெருக்கி இருக்கிறது. அது நான் பேசுவதை பெரிதாக்கி நாலா பக்கத்திலும் உள்ள பலரும் கேட்கும் படி செய்கிறது. அது எப்படி வேலை செய்கிறது என்று கூறியிருப்பார்கள். மேட்டூர் அணையை எப்படி கட்டிருக்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள். கப்பல் கனமாக இருந்தும் அது எப்படி கடலில் மிதக்கிறது என்று கூறிபாருங்கள். ஏரோப்பிளேன் எப்படி பறக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். அல்லது ஒரு விஞ்ஞான சாதனத்தைப் பற்றி கூறி பாருங்கள். ஆச்சரியமாக கேட்கமாட்டார்கள்! அவைகளில் அதிசயம் இருப்பதாக அவர்களுக்கு தோன்றாது! அப்படி கொஞ்ச நேரம் கேட்டாலும் மறுகணம் அதை மறந்து விடுவார்கள்!
அற்புத சக்தியிடம் உள்ள அபாரநம்பிக்கையும் மதிப்பும் அவைகளிடம் இருக்காது. விஞ்ஞானத்திடம் அவர்களுக்கு மதிப்பும் இருப்பதில்லை. காரணம் எந்த விஞ்ஞான சாதனத்தையும் இவர்கள் சிரமப்பட்டு கண்டு பிடிக்கவில்லை. பென்சிலினை கண்டுபிடித்தவர் எங்கள் தாத்தா, மின்சாரத்தை கண்டுபிடித்தவர் எங்கள் மூதாதையர் என்று இருந்தால் அதன் அருமை தெரியும். எவ்வளவு சிந்தனை, எத்தனை இரவுகள் விழித்து எதிர்ப்பை பார்க்காமல் கேலி கண்டனங்களை பொருட்படுத்தாமல், ஆபத்துக்கு அஞ்சாமல மூளை குழம்புமே, கண் குருடாகுமே, கால் முடமாகுமே என்று யோசிக்காமல் கஷ்டப்பட்டு விஞ்ஞான சாதனங்களைக் கண்டுபிடித்தவர்களெல்லாம் மேல் நாட்டார்கள். எனவேதான் அவர்கள் விஞ்ஞானத்தைப் போற்றுகிறார்கள். அவர்களுக்கு அதன் அருமை தெரிகிறது. அதனிடம் அதிக மதிப்பு வைத்திருக்கிறார்கள். இவர்கள் எந்தச் சாதனத்தைக் கண்டுபிடிக்கவும் கஷ்டப்படவில்லை. கஷ்டப்பாடாமல் சுகம் எப்படித்தெரியும்? ஆதலால்தான் இவர்களுடைய நாக்கில் ஏரோபிளேன் கண்டுபிடித்தவர்களுடைய பெயர்கள் நர்த்தனமாடுவதில்லை. ரயில் கண்டுபிடித்தவர்களுடைய பெயர்கள் நெஞ்சில் நடமாடுவதில்லை. விஞ்ஞானம் இந்த நாட்டில் விழலுக்கிறைத்த நீராகிவிட்டது. பாலைவனத்தில் வீசிய பனிகட்டிபோல், குருடனிடம் காட்டிய முத்துமாலையைப் போல, செவிடன் கேட்ட சங்கீதம்போல விஞ்ஞானம் மதிப்பற்றிருக்கிறது.
மதிப்புற்றிருக்கவேண்டிய பொருள் மதிப்பற்றிருப்பது நல்லது அல்ல! விஞ்ஞானம் மதிப்புபெற மாணவர்கள் உழைக்க வேண்டும்! மாணவர்கள் மக்களிடத்தில் சென்று அவர்கள் மனதில் உள்ள மாசை நீக்க வேண்டும். மனதில் உள்ள மாசை நீக்கி பகுத்தறிவைப் பரப்பிவிட்டு பிறகு விஞ்ஞானத்தைப் பற்றி பிரச்சாரம் செய்யவேண்டும் அப்போது தான் மக்கள் மனது தௌ¤வடைவர் அறிவை போற்றுவார்கள்! அஞ்ஞானத்தை கைவிடுவார்கள். உண்மையை நம்புவார்கள் பொய்யை நம்ப மாட்டார்கள்!
அண்ணா மாணவர்களுக்கு கூறி மாணவர் அணிதிரட்டி திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சிக் கட்டிலிலே அமர்த்தி, அவர் மறைந்த போனபிறகு நெருக்கடிக்காலத்தில் பகுத்தறிவுப் பணி முடக்கப்பட்டதை நினைவூட்டி மீண்டும் செய்ய வேண்டிய பணிகளை சுட்டிக்காட்டி 3.10.76 கழகக்குரல் வார ஏட்டில் நான் எழுதியதில் இருந்து சில வரிகள்.
இந்த நிலையில் ஓர் ஏக்கம் இன்னமும் அரைத்த மாலையே அரைப்பது போல காதலையும், மோதலையும் கருப்பொருளாக்கிக் கதைவாணர்கள் தமிழில் எழுதிவரும் நிலைக்கண்டு எழும் நெஞ்சின் வேதனையில் வடிக்கப்பட்ட ஒரு சொல்! விஞ்ஞானக்கதைகள் கற்பனைகள் தமிழ் மொழீயில் இல்லையே என்ற குறை இன்னமும் நீடிக்கலாகாது. தி.மு.கழகத்தின் எழுத்தாளர் பட்டாளம் எதிர்காலத்திற்கு செய்யக்கூடிய சிறப்பான சேவை இந்த குறிக்கோளை செயல் ஆக்குவது தான்"
எவரும் அந்த குறிக்கோளை நிறைவேற்றவில்லை நானும் செய்ய தவறினேன்.
"விஞ்ஞான கற்பனையை எழுத்தாளர்கள் மேலைநாடுகளில் விற்பனை செய்து வருகின்றார்கள் இது, விஞ்ஞானியர் முயற்சி வெற்றி எய்தத் துணையாக தூண்டுகோலாக அமைகிறது.
இங்கோ கடவுளரின் காமக்களியாட்டங்களைக் காசாக்கிக் காவியமாக்கிய காலம் போய் இன்று கடை காட்டி இடை காட்டிக் கச்சிறுகும் புன்மார்பின் பிதுக்கம் காட்டி கணிகையர்கள் ஆடுதலைக் கலையென்று காட்டி அவர் உடை நீக்கி உறுப்பெலாம் காட்டுதலை எழுத்தாக்கிப் பிழைப்பதையே தொழிலாக்கி எழுத்தின் தரத்தை இழித்திடுவார் செழித்திடுவார்செந்தமிழ மண்ணில்!
காலைக் கதிரழகைக் கண் விழித்தும் பாராமல் மேலைச் செழுவானின் மாணழகை நோக்காமல் இயற்கையின் அசைவுகள் ஒவ்வொன்றிலும் இலங்கிடும் எழிலை எண்ணாமல், விரிவானை, விண்வெளியை, மண்ணிற் புதைந்திருக்கும் கனிச் செல்வத்தை அதனைப் பெற்று இந்தப் பாரெய்த வேண்டிய மேம்பாட்டை, பண்பாட்டை நினைக்காமல், மங்கை முகத்தழகு மட்டுமே நினைப்பதும், பெண் பின் ஓடுவதிலேயே பொழுதினைப் போக்கவதுமாக ஒரு வேலையற்ற வீணர் கூட்டத்தை இன்று எழுத்துலகும் சேர்ந்து உருவாக்கி விட்டது! நேர்ந்த தவற்றை நிவர்த்தி செய்து, நல்வழியைக் காட்டக் குறிக்கோளோடும் கொள்கையோடும் எழுத்தாளர் முனைய வேண்டும்.
தமிழ்நாட்டை மொழி வழி மாநிலமாக பிரித்த பிறகும் மதராஸ் மாநிலம் என்ற பெயரிலேயே காங்கிரஸ் ஆட்சியிலே அழைத்து வந்தார்கள். விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் 78 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்தபோதும் காங்கிரசார் கற்பாறைப் போல் நின்றார்கள் பெயர் மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை. தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டால் தமிழ் தேசியம் வென்று விடும் இந்திய ஒன்றியம் உடைந்து விடும் என்று வீணான அச்சம் பச்சைத் தமிழரை வாட்டிவதைத்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு. பூபேசு குப்தா அவர்களை தமிழர்கள் என்றென்றும் போற்றுவார்கள். ஏனெனில் அவர்தான் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட அரசியல் சட்டத்தின்முதல் அட்டவணையில் உள்ள ஏழாவது பதிவை திருத்தம் செய்யவேண்டும் என்று 1961 இல் பாராளமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்தவர் ஆவார்கள். பாராளுமன்றத்தில் அந்த தீர்மானத்தின் மீது அறிஞர் அண்ணா அவர்கள் மே 1963 இல் ஆற்றிய உரை பொன் எழுத்துக்களால் பொறிக்க தக்கது. அண்ணா பேசுகையில் குறுக்கிட்டு பேசிய நா. மகாலிங்கம் இந்த பெயர் மாற்றத்தால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன் விளைய போகிறது-? என்று கேட்டார். அதற்க பதில் அளித்த அண்ணா பாராளுமன்றத்தை லோக்சபா என்று அழைத்தபோதும், மாநிலங்கள் அவையை ராஜ்யசபா என்று அழைத்தபோதும் நீங்கள் என்ன பயன் அடைந்தீர்கள் அதே பயனை மதலாஸ் மாநிலம் தமிழ்நாடு என்று மாற்றப் பெறும்போது அடையும் என்றார்.
அந்த தீர்மானம் காங்கிரசு பெரும்பான்மை பெற்றிருந்த பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் மொழி உணர்ச்சியால், மூண்டெழுத்த சினத்தீயில் காங்கிரசை சுட்டெரித்து திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி கட்டிலில் அமர்த்தி அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்றப் பிறகுதான் தமிழ்நாடு தமிழநாடாக பெயர் மாற்றம் பெற்றது! பல்வேறு மாநிலகளின் ஒன்றியமான இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலம் தனக்குரிய பெயரை சூட்டிக்கொள்ள எவ்வளவு ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது! தமிழ் தேசியம் உலகின் மூத்த மொழி குடும்பத்தின் பண்பாட்டு மீட்சிப் போரை உள்ளடக்கியதாகும். அப்போருக்குரிய மறவர்களாக அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் விலைவாசிப் போராட்டத்தின் போது பெரும அளவ கைதியானாலும் மன்னிப்பு கோரி பிணையில் வெளிவந்தனர். அந்த பின்னணியில் தான் சீன போரின் போது திராவிட நாடு கோரிக்கையை அண்ணா அவர்கள் கைவிட்டார்கள்! அது கோழைத்தனம் அன்று. கையில் கிடைத்த திராவிட முன்னேற்றக் கழகமாம் கருவியை கொண்டு இயன்றவரை தமிழ்ப் பண்பாட்டு மீட்சிப் போரை முன்னெடுத்து செல்ல நாணலை போல் வளைந்து கொடுத்தார் அண்ணா.
அண்ணா தமிழர்களை பண்படுத்த தமிழ் வென்றெடுக்க கூடிய வீரர்களாக தமிழர்களை உருவாக்க கால அவகாசம் தேவை என்று கருதியே வளைந்து நௌ¤ந்து கொடுத்தார். அவர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் கழிந்து பிறகு அறிவு மயக்கும் அகற்றும் அறிவியக்கம் என்ற தலைப்பில் நம் நாடு இதழியல் 12.2.78 அன்று எழுதியதை மீண்டும் உங்கள் முன் நினைவூட்டுகிறேன். இருபத்திரெண்டு ஆண்டுகளுக்க முன்பு நான் எழுதிய கட்டுரை. அன்று கலைஞர் ஆட்சியில் இல்லை. இன்று கலைஞர் ஆட்சியில் இருக்கிறார்! அவருக்கு பின்னால் அண்ணாவின் எழுத்தை உள்வாங்கி நான் எழுதினேன்! அண்ணா நம்மை எல்லாம் எதற்காக உருவாக்கினார் என்பதை நினைவூட்டினேன். ஆனால் கலைஞரோ, கழகமோ தமிழக அரசோ, தமிழகத்தை ஆண்ட ஏனைய திராவிடக் கட்சிகளோ எதுவும் செய்யவில்லை தமிழகம் அப்படியே இருக்கிறது. இதை அண்ணாவின் மொழியில் சொல்வதானால். ஏ! தாழ்ந்த தமிழகமே! தேய்ந்த தமிழ்நாடே! தன்னை மறந்த தமிழ்நாடே தன்மானம் அற்ற தமிழ்நாடே! கலையை உணராத தமிழ்நாடே! கலையின் இலட்சணத்தை அறியாத தமிழ்நாடே! மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ்நாடே! ஏ சோர்வுற்ற தமிழ்நாடே!
வீறுகொண்டெழு! உண்மைக் கவிகளைப் போற்று! உணர்ச்சிக் கவிகளைப் போற்று ! புரட்சிக் கவிகளைப் போற்று! புத்துலக சிற்பிகளைப் போற்ற என்று மாணவரிடத்திலே அண்ணா மன்றாடினார். அவர் உள்ளே விடுதலை நெருப்பு அனையாமல் எரிந்தவண்ணம் இருந்தது. அந்த விடுதலைக் கனவை பிரிவினை தடைச் சட்டம் வந்த பிறகு அரசியல் தந்திரங்களுக்காக பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டு அது பற்றி தம்பிகளுக்கு விளக்க அவர் எழுதிய இன்பஒளி நாடகத்தில் இப்படி சொல்கிறார்.
விடுதலை என்ற பேச்சு அளித்திடும் இன்பத்துக்கு ஈடாக வேறு ஏதும் இருந்திட முடியாது. பெற்றோம் விடுதலை என்று கூறிடும் போது மகிழ்ச்சி மட்டும் அல்ல, எங்ஙனம் பெற்றோம் விடுதலை என்பதனை நினைவில் கொண்டிடவும் அதன் பயனாக எழுச்சி மிக கொண்டிடவும் முடிகிறது. எழுச்சியுடன் நிற்பது இல்லை. பெற்றோம் வாழ்வு என்ற நம்பிக்கையையும் கருதுகிறது. எனவே எதிர்காலம் தெரிகிறது. எழில் தெரிகிறது ஏற்றம் தெரிகிறது. மங்கிய கண்கள் ஒளிவிடவும் வாடிய முகம் எல்லாம் மலர்ந்திடவும். என்றார் அண்ணா.
அண்ணாவை நினைத்து அவர் கனவை நிறைவேற்ற சூளுரை ஏற்போம்.

அறிவு மயக்கம் அகற்றும் அறிவியக்கம்



அறிவு மயக்கம் அகற்றும் அறிவியக்கம்

(நம்நாடு வார ஏட்டில் 12.02.1976 ல் நந்திவர்மன் எழுதியது)

பஞ்சாங்கம் பார்த்துப் பாழ்பட்டுப்போன நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடிகார முள்ளோடு போட்டியிட்டுக் காரியமாற்றியோர் நிரம்பிய மேலைநாடுகள் பொருளாராரத் துறையில் பெரு வெற்றி ஈட்டியதைக் கண்ட பின்னரும், கருத்திலே தெளிவு ஏற்படாமல் காரிருளில் சிக்கிக் கிடக்கின்றோம். கோளின் அசைவே கொணர்க உணவென வாளா இருந்தால் வயிறது தூற்றும். நேரம் சரியாகும்வரை ஏதுஞ் செய்யேன் என்று படுத்துக் கொண்டால் அடுக்கடுக்காய் அல்லல்கள் வரும். கைவரி கண்டு காசு பறிக்க எவனோ சொல்லும் பொய்யுரை நம்பிப் பொழுதெல்லாம் தூங்கிக் கிடந்தால் வறுமையை விரட்டுவதும் வளமையைத் திரட்டுவதும் முடியாமற் போகும். கடவுளுக்கு விழாவெடுத்துக் காசைக் கரியாக்கிக் கொண்டிருந்தால் இடைத்தரகர் ஏப்பம்விட ஏதுவாகுமே ஒழிய எல்லா நலனும் வந்துவிடாது.
அயனோத்சவத்தால் புண்ணிய பலம் அடையலாமென்பது அறிவிலார் மட்டுமே நம்புதற்கேற்றது. பாதோத்சவத்தால் இராஜதோஷ நிவர்த்தி ஏற்படும் என்றும். அமாவாசையால் தாரபுத்திராதி இஷ்டகாமிய சித்தி அடையலாம் என்றும் பௌர்ணமி பூசையால் சகல பாப நிவாரணம் எய்தலாம் என்னும் பௌர்ணமி பூசையால் சகல பாப நிவாரணம் எய்தலாம் என்றும் கிருத்திகை கொண்டாடுவரால் சௌக்கியம் விளையும் என்றும், திருவாதிரையால் சகல சம்பத்தும் சேரும் என்றும். மகம் கொண்டாடினால் சுஜன சிரேஸ்டத் துவம் ஏற்படும் என்றும். உத்திரத்தால் சீலம் நேரும் என்றும். சித்திரையால் ரூபலாவண்ய மனைவி கிடைப்பாள் என்றும் ஆரியர் இட்டுக் கட்டிய கட்டுக் கதைகளை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கலாமா? சித்திரை கொண்டாடாத சீர்திருத்தக்காரர்க்கு அழகிய மனைவி அகப்படாமல்தான் போய்விட்டாளா? சித்திரை கொண்டாடும் பக்திமான்கட்கு அகோர பத்தினியர் இல்லாமலா
இருக்கின்றனர் என்றெல்லாம் எண்ணத்திலே கேள்விக்குறிகளை எழுப்ப பகுத்தறிவியக்கமாம் தி.மு. கழகம் இங்கு இல்லையானால் மடமைப்பிடியில் மாக்களென இன்னமும் தான் நம்மவர் உழன்று கொண்டிருக்க நேரும்.
கைராட்டை சுற்றிக் கொண்டும், கலப்பûயால் உழுது கொண்டும், கட்டை வண்டியிலே பயணஞ்செய்து கொண்டும் இராகுகாலம்-எமகண்டம், வாரசூலை என நாளின் பெரும்பகுதியை வீணாக்கிக்கொண்டும், சும்மா இருப்பதே சுகம் என முழங்கிக்கொண்டும், திண்ணைப் பேச்சிலும் தெருமுனைப் பேச்சிலும். சந்துமுனைச் சிந்திலும் காலத்தைக் கழித்துக் கொண்டும் உலகில் நிரந்தரப் பிச்சைக்காரர்களாய் நம் நாட்டவர் என்றென்றும் இருக்குமளவு மதங்கள் ஊட்டிய ஆரியமாயையில் இருந்து தமிழினத்தை விடுவிக்கும் பெரும் பொறுப்பு தி.மு. கழகத்தின்மீது விழுந்துள்ளது.
கருட வாகனத்தையும், மயில் வாகனத்தையும், பெருச்சாளி வாகனத்தையும், ரிஷ்ப வாகனத்தையும் வெள்ளியாலும் பொன்னாலுஞ் செய்து óவறுமையிலே கடைசிவரை நெளியத்தான் óகற்றுக் கொண்டிருக்கிறோமே ஒழிய, விண்வெளியுகத்திற்கு வேண்டிய அறிவைப்ó பெறத் தவறிவிட்டோம்.
"கருடன், கழுகு, மயில், திருடும் நாய், பெருச்சாளி, கடிக்கும் பாம்பு, குரங்கு, பிடிக்குங்குதிரை, யானை, குருடுகளே! மாடுளையும் அதன் சாணியையும் பெண் குறியையும் தெய்வமென்று வெறி கொண்டலையாதேயும் " என்றும்.
"வில்வந் துளசி கொன்றை கொல்லும் அவரி ஆத்திவேம்போ டரசுவன்னி, ஒம்பால் பனையறுகம் புல் ஒதிதருப்பை யாவும் நல்கும் கதியென்றெண்ணி பொருளைக் காணமற் போனீர்-இருளின் மக்களே நீங்கள் " என்றும் சித்தர்கள் பாடி அறிவுறுத்தும் நிலை ஏன் ஏற்பட்டது என இன்னமும் எண்ணிப் பார்க்காதிருக்கிறோம். சித்தர்கள் வழியில் சீர்திருத்த இயக்கமாம் தி.மு. கழகம் எழுப்பிய வினக்குறிகள் தொடர்ந்து தமிழன் ஒவ்வொருவனுடைய நெஞ்சிலும் ஒங்கி ஒலித்தாக வேண்டும். விஞ்ஞானச் சித்தனை வேரூன்றி வளர்ந்தாக வேண்டும். பகுத்தறிவு ஒளி பாய்ந்தாகல் வேண்டும்.
"செஞ்ஞாயிற்றுச் செலவு " பற்றிய புறப்பாடல் தமிழனிடம் உண்டு. ஆயின் இடையில் தமிழனுக்கு ஏற்பட்ட மதி மயக்கம் பாடல் வழியில் ஞாயிறு ஏகும் பயணத்திற்கான விஞ்ஞான அறிவை வளர்த்துக் கொள்ளவிடாமல் தடுத்துவிட்டது. அறிவியல் முனைப்பையும் முன்னேற்றத்தையும் அடியோடு கெடுத்து விட்டது. வறுமையை பரிசாகக் கொடுத்துவிட்டது. ஊக்கத்தை வேரோடு ஒழித்துவிட்டது. உழைக்கும் துடிப்பை மூடநம்பிக்கையும் புராண போதையும் அழித்துவிட்டது.
அணுவைத் துளைத்து என்ற திருவள்ளுவமாலை வரி இங்கே உண்டு. அணுவைப் பிளக்கும் ஆற்றலை நாம் பெற்றோமில்லை. திருவள்ளுமாலை வரியில் கற்றோமில்லை.
பழந்தமிழ் மன்னர்களும் பொறியியல் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தே வந்தள்ளனர்.
மன்னர் தம் கோட்டை மதில் மீது நூற்றுவரைக் கொல்லி, நூக்கியெறி பேய்ப்பொறி களிறுப்பொறி. பாம்பும் பொறி சங்கிலிப்பொறி புலிப்பொறி. விற்பொறி, குதிரைப் பொறி, தொடர்வாள். கற்பொறி, தீப்பொறி, நெருக்கு மரம்.கெம்புருகு, வெம்புருகு,நெய் உமிழும் பொறி, அம்புமிழும் பொறி, கல்லுமிழும் பொறி, குரங்குப்பொறி, அரியும் பொறி, நண்நூல் என்று பகைவரைத் தாக்கும் பன்னூறு பொறிகள் இருந்தகை சீவக சிந்தாமணி செப்புகின்றது. இன்று போர்க்கருவிகளை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக் கற்றுள்ளோம் என்பதைத் தவிரப் புதுவதுபுனையும் ஆற்றல் அற்றுவிட்டோம் என்பதுதானே வெள்ளிடைமலை.
இத்தகு பொறிகளே இல்லாமல் கையும் காலுமே கருவிகள் என மனிதர்கள் அடித்துக்கொண்டிருக்கலாம். கற்கருவி, இரும்புக் கருவி என மாந்த நாகரிகம் மெள்ள மெள்ள வளர்ந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்போர் அவனியில் இருந்திடக் காண்போமோ?
விண்வெளி யுகத்தில் கட்டை வண்டி வேகத்தில் காரியம் நடைபெற்றாக வேண்டும் என வாதிடும் விந்தை மனிதர்களும் இருக்கின்றரே என்ற வேதனைதான் வெடித்துக்கிளம்புகின்றது.
ஒலி வேகத்தில்-ஒளி வேகத்தில் உலகில் அறிவியல் வளர்ச்சி ஏற்படும் காலத்தில் நாம் வாழ்கின்றேம்.
ஒலி வேகம் வேண்டும் என உணர்த்த ஒலியை ஒம் வடிவில் வழிபட்ட பரம்பரையினர் நாம் நாம் எனினும் ஆமைகளாய் ஊமைகளாய் ஆற்றலற்றுக் கிடக்கின்றோம்.
ஒளி வணக்கம் - உதயசூரியன் வழிபாடு உலகெல்லாம் பண்டு தொட்டு இருந்து வருகின்றது. ஒளிக்கு உருவம் தந்து-தீயை உண்டாக்குகின்ற தீக்கடைக் கோலை "சிவலிங்க " மென வணங்கி வருகின்றோம். தீக் கடைக்கோல் அன்று தீ மூட்டத் தேவையாயிற்று. அதனை அந்நாளில் தெய்வம் ஆக்கிவிட்டனர். பின்னால் சக்கிமுக்கிக்கல் தீயை உண்டாக்கினலும் அதனைக் கும்பிடு வாரில்லை. இன்று தீப்பொறியை உண்டாக்குவதால் குச்சியை தெய்வமெனக் கும்ப்பிடுவோமா? ஒரு பொத்தானை அமுக்கினாலே அறைமின் ஒளி பரவுகின்றது - கண்டு கன்னத்தில் போட்டுக்கொள்கிறேமே ஒழிய பொத்தனையோ-மின்விளக்கையோ வழிபடத் தலைப்படுவதில்லை.
ஒளி வணக்கம் உருவ வணக்கமாகி "நட்டகல்லை தெய்வ மேன்று " சிவவாக்கியர் என்னும் சித்தர் செப்புவதுபோல நாலுபுட்பம் சாத்தும் மடமை நாட்டினில் பெருகிவிட்டது உருவணக்கத்தை ஒழித்து ஒளி வணக்கத்தினை உயிர்ப்பிக்க கித்தர்களும் வள்ளலாரு முயற்சி செய்யும் அளவு தீமை புரையோடி விட்டது. ஒளி வேகத்தில் விண்ணில் பயணம் செய்யும் கலங்களைப் படைத்திடும் மேனட்டார் ஒளியை வழிபட்டுக் கொண்டிருந்தாரில்ல இந்த உண்மையை பசுமரத் தாணிபோல் தமிழன் ஒவ்வொருவனுடைய உள்ளத்திலும் பதித்துப்பகுத்தறிவு யுகம் உதிக்கும் வரையில் தி.மு. கழகத்தின் தொண்டு நம் நாட்டுக்குத் தேவைப்படுகின்றது.
வழிபாடு நம் அறிவியல் வளர்ச்சியைக் கெடுத்துவிட்டதும் ஆலயம் தொழுதல் சால நன்றென்று கோயில் கட்டிக்குடமுழுக்காட்டிக் கொண்டிருந்தோமே ஒழிய அறிவியல் துறையில் முன்னேற்றத்தைக் காணத் தவறிவிட்டோம். இத்தோடு முன்னோர் அறிந்தவர்களையும் மூடிவைத்து பாழாய் போய்விட்டது.
கண்டவர் விண்டிலர் என்று கணக்கில்லா அறிவுத்துறை செய்திகள் கல்லறைக்கும் போய்விட்டன. சித்த மருத்துவச் சிறப்பு இன்று பெருமையாகப் பேசப்படுகின்றது. எத்தனை சித்த மருத்துவச் செய்திகள் ஒரு சிலரின் தன்னலத்தால் பிறங்கடைகட்குக் கிட்டாமல் எட்டாமல் போய்விட்டது சிலரிடம் சிறைப்பட்டிருந்த அறிவுதான் இப்படிப் பயன் படாமல் போயிற்றென்றால்ல் செல்லரித்த சுவடிகளில் அழிந்துவிட்ட அற்புத மருத்துவத்திற்கு அளவேது.
உள்ள அறிவையே ஒழுங்காகப் பயன்படுத்திக் கொள்ளததால் தவறிவிட்ட நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
‘நித்திய கல்யாணி’ எனும் மூலிகை இன்று புற்றுக் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப் பயன்படுகின்றது. வேர்கள் மூலிகைகள் பற்றி ஆழ்ந்தகன்ற அறிவுசான்ற பழந்தமிழ்ச் சித்தர்க்கு இது தெரியாத சேதியாக இருந்திருக்கமுடியாது. ஆயின் அழிந்து போன ஏடுகளில் அடுத்துவர்க்கு அறிவிக்கப்படாது அழிந்த கருத்துக்களில் இதுவும் அடங்கி இருக்கலாம்.
இன்றோ, மருத்துவச் சொற்கள் தமிழில் இன்னமும் மொழியப் பெயர்க்கப் படாமல் மருத்துவம் ஆங்கிலத்தின் வாயிலாகக் கற்பிக்கப்படுகின்றது. தமிழ் இத்துறையில் பயிற்று மொழியாவது தி.மு. கழகம் மறுபடியும். அரசுப் பொறுப்பேற்றால் தான் இயலும்.
புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவராக இருந்தபோதே டாக்டர் அரிமா மகிழ்கோ என்ற இளைஞர் உடற்கூறியலைத் தனித் தமிழில் மொழி பெயர்த்தார். இன்னமும் இது வெளியாகவில்லை. தூய தமிழில் மருத்துவச் சொற்களைப் படைக்கும் இவர் போல்வார்தொண்டைத் தமிழ்ப் பற்றுடைய தி.மு. கழக அரசே பயன்படுத்த முடியுமே அல்லாமல் இனப்பகைவர் எம்.ஜி. ஆரிடம் இதனை எதிர்பார்ப்பதால் பயனில்லை.
மேலைநாட்டவர் குற்றவாளிகளை ஒருவகை நோயாளிகள் என்று கொண்டு சில நரம்புகளை மருத்துவம் அல்லது அறுவைப் பண்டுவம் மூலம் திருத்தினால் கொலை, களவு போன்ற குற்றங்களே நிகழாமல் தடுத்திடலாம் என்கிறனர், ஒபன் ஈமர், எட்வர்டு டெல்லர் போன்ற அறிஞர்தம் கருத்தை பேரறிஞர் அண்ணா மனிதனும் மிருகமும் என்ற கட்டுரையில் மேற்சொன்ன தகவலைத் தெரிவிக்கின்றார்.
எழுபத்தீராயிரம் நாடிகளும் பதின்மூன்றாயிரம் நரம்புகளும் மனித உடலில் உள்ளன எனவும், நாழிகை ஒன்றுக்கு 360 சுவாசமாக நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு முறை சுவாசிக்கிறோம் என்றும் திருமூலர் கணக்கிடுகிறார், இந்த அறிவு இதற்குப் பின்னால் ஆய்வைத் தூண்டப்பயன்பட்டிருந்தால் ஈரர்யிரம் ஆண்டுகளில் இங்கேயே மேலே நாட்டில் இன்று முளைவிடும் சிந்தனை என்றோ முளைவிட்டிருக்க முடியும். சில நூல்களை தொடத் தவறினோம் தொட்ட நூலில் அறிவிக்கப் பட்ட செய்திகளை விட்ட இடத்தினின்று தொடரத் தவறினோம். இன்று இடறுகின்றோம். கராத்தே போர் முறைக்கே வித்தே தமிழகத்தில் இருந்து தான் கிடைத்துள்ளது. பழந் தமிழகத்தில் வர்மக்கலை என்றோர் போர்முறை உண்டு இதில் வல்லமை பெற்றதினாலேயே சில அரசர்க்கு வர்மன் என்ற அடைமொழி ஏற்ப்பட்டது. இந்தக் கலை கற்பவரின்றி கற்பிப்பாரின்றி தமிழகத்தில் அடியோடு அழிந்து விட்டது.
வர்மக்கலையை அறிந்தவர் இன்று மலேசியாவில் வாழும் மாமுனிவர் இராமதாசர். கூரியர் ஆசிரியர் மணவை முசுதபா போன்றோர் இராமதாசரிடம் இருந்து இக்கலை பற்றிய நுட்பங்களைக் கேட்டறிந்து நாட்டுக்கு அறிவிக்கும் நினைவுடன் இருந்து வருகின்றனர். எதிர்காலத்தில் ஏற்பட உள்ள தி.மு.கழக அரசு இக்கலையைப் பேண ஆக்கமும் ஊக்கமும் நல்கும்.
அழிந்துவரும் கலைகளை அழியாமல் காப்பதற்கும் அறிவியல் வளர்ச்சியை விளக்கவும் அறிவியக்கமாம் தி.மு.கழகத்தின் பணி நம் நாட்டிற்கு என்றென்றும் தேவையாய் உள்ளது.
நிலந்தரு திருவே பெரிதென்றால்கூடப் பொறியியல் அறிவு பயன்பட்டு இயந்திரங்கள் வேளாண்மையில் இறங்கிப் புதிய முறைகள் செயல்படுத்தப்பட்டால்தான் பசிப் பிணியை ஓட்ட முடியும். சோவியத் விஞ்ஞானியர் மனிதனுடைய மூவேளை உணவையும் மாத்திரை வடிவில் ஒரு தீப்பெட்டியில் அடைக்க முடியும் என்றோர் ஆராய்ச்சி மூலம் நிறுவியுள்ளனர். இவ்வராய்ச்சியின் பயன் மக்களை அடையும் போதுதான் பசிப்பிணிகயை வெற்றி கொள்ள முடியும். பொறியியல் வளர்ச்சி அறிவியல் எழுச்சி இன்பத் தமிழகத்தில் ஏற்பட எண்ண விளக்கேற்றவல்ல இலட்சியப் பாசறை தி.மு.கழகமே.
பொறிகளாலே உழைப்பினையே புவிமாந்தர் பெற்றிட்டால் பூமியிலே இருவர்க்கப் பூசல் இல்லாதொழியும். பற்றாக் குறை இல்லாமல் பல்பொருட்கள் பல்கிவிட்டால் பகிர்ந்திடுவதில் பாகுபாடு பாரினில் இருந்திடாது. முற்றுரிமை பெற்றுலகில் முன்னேற்றம் காண்பதற்கு முனைப்போடு உழைப்பவரின் முக மலர்ச்சி தோன்றுவதற்கு வெற்றொலியும் விரக்தி வேதாந்தங்களும் வெட்டிப் பேச்சும் தடையாகும். வெட்டிப் பேச்சைத் தட்டி நடக்கும் வீரம் என கழகம் தோன்றிய முப்பதாம் நாளன்று எழுதிய கட்டுரையில் பேரறிஞர் அண்ணா எழுதுவாரே அந்த வீரத்தைப் பெற்ற மறவர்தம் பாடிவீடாம் தி.மு.கழகமே, விஞ்ஞான வழிச் சிந்தனையை வேரூன்ற வல்லது. அறிவெழுச்சி ஊட்ட வல்லது. அறியாமையை ஓட்டவல்லது.
அகமகிழ முக மலர அவனியுள்ளோர் ஒன்றாகி ஒருலகம் என்றாகி இருவர்க்கம் அற்றொழிய எல்லாரும் எல்லாமும் பெற்றுயர மடமை தொலைய மதவிருள் கலைய பகுத்தறிவொளி பரவ பழந்தமிழர் பண்பும் கலைகளும் சிறந்தொளிர தி.மு.கழகம் ஆற்ற கொண்டிய பணிகட்காகவே நாடும் வீடும் நாளும் கழகத்தை கலைஞரை ஏற்றிப் போற்றிக் கொண்டிருக்கும்.

அண்ணா உருவாக்கிய புதிய கோட்பாடு!



அண்ணா உருவாக்கிய புதிய கோட்பாடு!

(நம்நாடு வார ஏட்டில் 10.11.1977 ல் நந்திவர்மன் எழுதியது)

வாக்காளர்கள் நல்ல தீர்ப்பு வழங்க தவறி விட்டாலும் அறிஞர்களும் வரலாற்று ஆசிரியர்களும் தி.மு. கழகத்திற்கு நற்சான்று நல்கத் தவறினாரிலர் கொள்கைச் சிறப்பால் குவலயத்தில் குன்றாப் புகழை குறைவில்லாமல் கொண்ட தி.மு.கழகத்தை - தென்னக அரசியல் கட்சிகள் பற்றிய எழுதிய James Watch... என்ற சுவீடன் நாட்டு ஸ்டாக்ஹோம் பல் கலைக்கழக அரசியல் விற்பன்னா "Faction & Front" என்ற நூலில் பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறார். அதே நேரத்தில் காட்டிக் கொடுத்த நடிகர் கட்சியைப் பற்றி எழுதுகையில் One - Man Show என்று வர்ணித்துள்ளார். ஒரு மனிதனே இணையாக நடிக்கப் பெண்ணில்லாமல் துணைப் பாத்திரங்களேற்க நடிகர் இல்லாமல் - வில்லனாக ஒரு முளைத்து அவனை வீழ்த்தும் காட்சி இல்லாமல் படம் முழுவதும் ஒருவரே காட்சி தந்தால் யாரால் ஏற்பதற்கு இயலும்? ஒரு வரும் காண விரும்பாரன்றோ! திரைப்படத்திலேயே ஒரு மனிதன் மட்டும் தோன்றுவது சரியாகாது எனில் அரசியல் கட்சியில் One - Man Show மக்களால் வெறுக்கப்படுமே தவிர வரவேற்கப்பட மாட்டாது.
காணச் சகிக்காத காட்சி One - Man Show திரையில்! இப்படிக் நாணத்தக்கதாக முடிவை மேற்சொன்ன நூலாசிரியர் One - Man Show என்று சொல்வது நாணத்தக்க ஒன்று - அந்தக் கட்சியில் உள்ளோர்க்கு!.
பேணத் தக்கதல்ல இந்த ஒரு மனித ஆதிக்கம்! எதிர் காலத்தில் இது மிகவும் பாதிக்கும் என்ற உணர்வு மெல்ல நடிகர் கட்சியிலே கூட முளைவிட்டுக் கொண்டிருக்கிறது. நியமனப்பொதுக் குழு -நினைத்தால் மாறும் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள்! தேர்தலே நடத்தாமல் கட்சிப் பொறுப்பில் தன்னைத் தானே திணித்துக் கொண்ட நடிகர்! அவர் விரும்பினல் ‘தலைவர்களை‘ இறக்குமதி செய்து கொள்ள அவரே அவர்க்களித்துக் கொண்ட உரிமம் இவை கேளிக்குரியவை என்று தெரிந்தும் - ‘பச்சை‘யாகப் புரிந்தும் பதவி மேலுள்ள ஆசையால் ஒட்டிக்கொண்டிருப்போர் உதடுகளால் போற்றித் திருஅகவல் பாடிக் கொண்டிருந்தாலும் மனம் பொருமி உள்ளத்தால் திட்டிக்கொண்டிருக்கிறார்கள்! One - Man Show சுவை குன்றினல் அவை- சட்டப் பேரவையும்- காலியாகலாம்!
குறுகிய நோக்கங்கட்காக கோப தாபங்கட்காக- கொள்கை ஏதும் அறிவிக்காமலே தொடங்கப் பெற்ற நடிகர் கட்சி எப்படி நல்லறிவாளர் பாராட்டைப் பெற முடியும்? கொள்கை அறிவித்த பின்பு நடிகர் தந்த குழப்ப உரைகளைக் கேட்டு அறிஞர்கள் குறுநகையல்ல குலுங்கக் குலுங்கச் சிரிக்காமல் எப்படி இருந்திட முடியும்?
‘அண்ணா இசம் என்ற சொல்லை நடிகருக்கு முன்பாகவே புதுவை அ.தி.மு.க. தன் கொள்கைப் பிரகடனத்தில் கையாண்டது. 1973 மர்ச் 22ம் தேதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்8-ஆம் பக்கம் 1-ஆம் பத்தியில் தெளிவாக வெளியான கொள்கை அறிவிப்பு தனைப்பொருள் புரியமால் திருடியநடிகர் செப்டம்பரில் தன் கொள்கையாக அதனைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்? எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்- பாடியவன் பாட்டைக் கெடுத்தான் என்பது போல் நாட்டைக் கெடுக்க வந்த நடிகர் திருடிக்கொண்ட சொற்றொடராம் அண்ண இசத்திற்கு அளித்த சுய விளக்கம் அதனை கேலிக்குரியதாக்கி விட்டது ‘காரீயமும் வெள்ளீயமும் கலந்தது காந்தீயம்’ என்று கூட நடிகர் விளக்கம் நல்க முற்பட்டிருப்பார்! நல்லவேளை காந்தியம் தப்பிற்று. அண்ணா இசம் அகப்பட்டது. கம்யூனிசமும் கேப்ரி விசலிசமும் சோஷலிசமும் தனித்தனிப் பிழிந்து வடித்தொன்றய்க் கூட்டிய சாறே, அண்ண இசமேன நடிகர் உளறி வைத்தார்!
அண்ணாவின் பொருளாதாரக் கொள்கை என்ன என்பதை முதலில் குறிப்பிட்ட அரசியல் அறிஞர் James Watch தமது நூலின் அழகுற வடித்துள்ளார்.
அண்ணா சமுதாயத்தை இரண்டாகப் பிரிக்காமல் மூன்றாகப் பிரிப்பதாக அந்த அறிஞர் கூறுகிறார். முத்தமிழ் வித்தகர் என்பதால் அண்ணா மூன்றாகப் பிரித்தாரிலர். முப்பால் கற்றவர் என்பதாலும் அன்று, வலது-இடது என்று மட்டும் அரசியல் இயக்கங்களைப்பகுப்பதில்லை. (Centrist) நடுவிலுள்ளோர் என்றும் பகுப்பதுண்டு. தி.மு. கழகம் ஒரு Centrist Party வலதுசாரி கட்சியோ - இடதுசாரியோ அல்ல. நடுவழி நடக்கும் நல்லதோர் இயக்கம். நடிகருடைய கட்சிபோல் கெடுவறழியில் நடக்கும் கீழோரின் கூடாரமன்று தி.மு. கழகம் எனவே அரசியலில் எப்படி நடுவழியோ அவ்வாறே பொருளாதாரத்திலும் இடைவழியே தி.மு. கழகம் ஏற்ற வழி. எனவே தான் பேரறிஞர் அண்ணா முதலாளி-தொழிலாளி என்ற பிரிவில் சமுதாயத்தை அடக்கமால் இடைப்பட்ட பிரிவு ஒன்றைக் குறிப்பிட்டார்.
மொழியில் இசையில் பண்பாட்டில் இரவல் கருத்துக்களை அண்ணா விரும்பாததைப் போன்றே பொருளியற்றுறையிலும் இறக்குமதி செய்யப்பட்ட கோட்பாடுகள் கூடாது என்னும் கொள்கையை அண்ண கொண்டிருந்தார்.
மேற்கு-கிழக்கு என வல்லரசுகள் உலகை இருகூறாக்கிவைத்தற்கெதிராக நேரு போன்றோர் ‘நடுநிலை’ கூட்டுச் சேராமை போன்ற கோட்பாடுகளை உருவர்க்கினர். நட்பு பகை இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளோரை "நொதுமலர்" என்பது தமிழ் மரபு-அதைப்போல் மேற்கு-கிழக்கு வல்லரசுகட்கான போட்டியில் யாருக்கும் நண்பனாகவோ பகைவனாகவோ இல்லாமல் "நொதுமலர்" போல் இந்நாடு நடக்கலாயிற்றன்றோ!
அதுபோன்றே காப்பிடலிசத்தைக் காப்பி அடிக்காமலும்-கம்யூனிசத்தை இறக்கு மதி செய்யாமலும் "இரவல் பொருளியற் கோட்பாடு" வேண்டாம் என்று புதிய விளக்கம் புகன்றவர் அண்ணா.
முதலாளி-தொழிலாளி என்ற இருபிரிவோடு "நுகர்வோர்" என்ற இடைப்பிரிவு ஒன்றுண்டு என உணர்த்தினார். முதலாளி தொழில் தொடங்குவது நுகர்வோர் பயன் கருதியே. நுகர்வோர் தேவைகட்குப் பொருட்களை உற்பத்தி செய்யவே தொழிலாளி அமர்த்தப்படுகின்றான். எனவே நடுத்தர வர்க்கமானது நுகர்வோரின் பிரதிநிதியாகிறது. முதலாளி வர்க்கமும் நடுத்தர வர்ககமும் நடுத்தர வர்க்கமான நுகர்வோர் (Consumer) நலனுக்காகவே ஒன்றுபட்டுள்ளன. நுகர்வோர் என்னும் நடுத்தர வர்க்கத்தார் மனிதாபிமான அடிப்படையில் தொழிலாளி வர்க்கத்தோடு தான் தோழமை பூண்டிருக்க வேண்டும் என்றும் அண்ண திட்டவட்டமாகக் கூறியுள்ளார். பாட்டாளிக்குக் கூட்டர்ளியாகவே நடுத்தர வர்க்கம் இருக்கவேண்டும் என்பதே அண்ணாவின் கட்டளை. மனிதாபிமான அடிப்படையில் இந்தச் சார்பு தேவை என்பது அறிஞரின் எண்ணம்.
கம்யூனிஸ்டுகள் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக எத்தகைய பங்குப் பணியை மேற்கொள்ளவேண்டும் எனக் கார்ல்மார்க்ஸ் கட்டளை இட்டுச் சென்றாரோ அத்தகு பணிகளை செவ்வனே செய்து முடிக்கத் தக்கார் நடுத்தரவர்கத்தினரே என்பது பேரறிஞரின் துணிபு.
கானா நாட்டு மறைந்த அதிபர் நிக்ருமா தன் நாட்டுப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தி புதிய பொருளாதாரக் கோட்பாடு ஒன்றை உருவாக்கித் தருக என, கானா நாட்டுப் பொருளியற் பேராசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார். இரவல் பொருளாதாரக் கொள்கை வேண்டாம் என்பதாலேயே புதிய விஞ்ஞான சோஷலிசத்தினை உருவாக்கித் தருமாறு நிக்ரூமா கேட்டார். "நிக்ருமா இசம்" அரும்பும் முன்னரே ஆட்சி இழந்தார் என்பது வரலாறு.
அண்ணாவின் பொருளியற்கோட்பாடு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தி ஆய்ந்தறிந்த அறிஞர்களிடம் பொறுப்புத் தரப்படுமானல் புதிய சித்தாந்தமாகவே புவியில் மலரக் கூடும் காலம் கனியும் போது தி.மு கழகம் இந்தக் காரியத்தை ஆற்றிடும்.
(Fabian Socialism) ஃபேபியன் சோஷலிசம்- இட்லரின் நேஷனல் சோஷலிசம் -மாவோ இசம்-மார்க்சிசம்-இலெனிசம்-டிராட்ஸ்கி இசம்-டிட்டோ இசம்-நிக்ரூமா இசம்-ஜனநாயக சோஷவிசம்-என்றெல்லாம் ‘சோஷலிசம்’ பல்வேறு உருவெடுத்து விட்டது. பலரும் தத்தமது மனப்போக்கிற்கு ஏற்ப சோஷலிசத்தைத் திரித்துத் தங்கள் கருத்துகளை அந்த "லேபிளில்" விற்க ஆரம்பித்துவிட்டனர்.
சோஷலிசம் என்ற சொல் எந்த அளவு சீர்கேடு அடைந்து விட்டது என்றல் சாய்பாபாவினó மத போதனையை Spiritual Socialism ஆத் மார்த்த சோஷலிசம் என்று ‘பிளிட்ஸ்’ ஏடு கூறுமளவு சீர் கெட்டுவிட்டது.
பொதுத்துறையில் போட்ட பணம் பயன் தராமல் போகிறது. ஒரு வழிப் பாதையாகவே முதலீடு பொதுத்துறையில் முடங்கிப் போகிறது. பயன் வெறுமையாக அமைகிறது என்பதால் அண்ணா காங்கிரசாரின் கொள்கை ‘போஸ்ட் ஆபீஸ்சோஷலிசம்’ என்று கிண்டல் செய்தார். காந்தியாரின் தர்மதர்த்தா சோஷலிசத்திலிருந்து தபால் ஆபீஸ் சோஷலிசம் என்ற அளவு காங்கிரஸ் முன்னேறி விட்டது என்று தான் கேலி செய்ய வேண்டும்.
இத்துணை திரிபு வாதங்கட்கிடையே தெளிந்த கண்ணோட்டத்துடன் தி.மு. கழகத்திற்கெனத் தனியான பொருளியற் கொள்கையை அண்ண போதித்துச் சென்றுள்ளார். அவர் தொட்டுச் சென்ற துறையை அறிஞர் பெருமக்கள் துவக்கினால்-விளக்கினால் விட்டுச்சென்ற இடத்திலிருந்து விரைந்து முன்னேறி முழுமை பெறமுடியும்.
போலிகளால் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற இயலாது. பொருளாதாரம் தெரியாத புரட்டர்களால் புதிய தித்தாந்தம் உருவாக முடியாது. உலகத் தலைவராக வேண்டிய அண்ண நன்றி கெட்ட தமிழனுக்காகத் தன் ஓயா உழைப்பை நல்கித் தலை சாயாதிருந்தால் "பொருளியற்கோட்பாட்டை" உலகினுக்கு மார்க்சிற்குப் பின்னல் அளித்த மாமேதை என்று புகழை ஈட்டியிருப்பார்!
காலம் நம்மிடமிருந்து அவரைக் கவர்ந்து சென்ற காரணத்தால் கலைஞர் தம் சுட்டுவிரல் அசைவிற்குக் காத்திருக்கும் இலட்சோப லட்சம் தமிழர் தம் பேரியக்கமாம் தி.மு. கழகமே அந்தப் பணியை நிறைவேற்றி ஆக வேண்டியுள்ளது.

உலகினுக்கே வழிகாட்டும் ஒளி விளக்கு!


உலகினுக்கே வழிகாட்டும் ஒளி விளக்கு!

(கழகக்குரல் வார ஏட்டில் 03.10.1976ல் நந்திவர்மன் எழுதியது)


புதைச் சேற்றில் அகப்பட்ட மூங்கையெனத் தவித்த புகழார்ந்த தமிழ்க் குலத்தின் நிலை கண்டு கலுழ்ந்த அண்ணா,

கொள்கை - குறிக்கோள் இன்மையே

இன்றுள்ள நிலைமைக்குக் காரணம்

என்றார்.

கற்றுத் தேர்ந்த வித்தகர் பலரைக் காசினிக்கு அளித்த தமிழ் நிலத்தில் மட்டுமல்ல - உலகெங்குமே நிலவும் குழப்பத்திற்கும், அமைதியின்மைக்கும் கொள்கையின்மையே காரணமாக அமைந்துவிட்ட சூழலில் - சுழலில் நம் தலைமுறை சிக்கிக் கிடக்கிறது!

காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகள், "காரல் மார்க்சின் கம்யூனிசமா? மேலை நாட்டு முதலாளித்துவமா?' என்ற கேள்விக்கிடையே வளரத் தொடங்கின.

"தென் கிழக்காசிய அரசியலில், அரசியல் கட்சிகளும் - அவற்றின் தலைவர்களும் மக்களைச் சரிவர இயக்க முடியாமல் போனமைக்குக் கொள்கை அடிப்படை இன்மையே காரணம்" என அரசியல் வித்தகர்கள் கூறுகின்றனர்.

"தனி நபர் விருப்பு - வெறுப்புக்கேற்ப ஏற்படும் கட்சிகளின் ஆயுள், குறுகிய காலத்தினதே" என்பதற்கு எடுத்துக் காட்டுக்கள் கிடைக்கின்றன. அரசியல் வரலாற்றில்!

நம்மிடமிருந்து பிரிந்தவர்கள் கட்சி இதற்கு நல்லதோர் உதாரணமாகும்.

ஆப்பிரிக்க நாடுகளிலும் இதே நிலைமை தான், "கவர்ச்சிகரமான சொல்லடுக்குகள், வலுவான அரசியல் பொருளியற் கொள்கைகளாக ஆகிவிடா என்பதற்கு அங்கு நிறைய எடுத்துக்காட்டுக்கள் அகப்படுகின்றன.

அண்ணாவே சொல்லி இருக்கின்றார்- "கொக்கோ உற்பத்தியைப் பெருக்குவோம்" என்று முழங்கிய நிக்ரூமா, அதற்கு ஏற்ற சந்தைகளை உருவாக்கத் தவறியது பற்றியும், அதனால் உற்பத்தி பெருகியும் 'கானா' நாட்டுப் பொருளாதாரம் சீர்குலைத்தது பற்றியும்.

கொள்கை இல்லாமல் சீர்குலையும் நாடுகள், கிழக்கு அல்லது மேற்கு என்ற இரு வல்லரசு முகாம்களில் விழுகின்றன -- வீழ்ச்சியுறுகின்றன. 'இரவல்' பொருளாதார அரசியல் கொள்கைகளில் சிக்குகின்றன.

கருத்துக்கள் பிறப்பதற்குக் கருத்தடை ஏதுமில்லை.

கருவானவை உருவாவதும் உண்டு -- கருவிலேயே கருகிப் போவதும் உண்டு.

கருத்துக்களும் அவ்வாறே காலங் கடந்தும் காசினியில் நிலைப்பதும் உண்டு -- கண்முன்பே காற்றாகிப் போவதும் உண்டு.

காலம் உள்ளளவும் ஞாலம் உள்ளளவும், ஒரே கருத்தே ஏற்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. காலச் சுழற்சிக்கேற்பக் கருத்து வளர்ச்சியும்-மலர்ச்சியும் ஏற்கப்பட்டாகல் வேண்டும். இது, "தீது" என்றோ, "புதுக் கருத்து" உதயமாவது பேதைமை என்றோ அறிவுடையார் கூறார்.

அறிவு, தேங்கிய குட்டை நீரன்று -- தெளிந்த ஆற்று நீரோட்டம், ஊற்று நீரின் புதுப்புனலோட்டம்.

பிரெஞ்சுப் புரட்சி வெடித்ததன் பயனாய் அகிலம் அறிந்த அரசியல் நெறிகள் -- இரஷ்யப் புரட்சி உருவானதன் காரணமாக உலகம் உணர்ந்த உயரிய கருத்துக்கள் -- இவைகளோடு மனிதகுலம் பூண்டற்றுப் போக வேண்டுமா?

இன்னொரு புரட்சியோ -- புதுக் கருத்தோ -- பழைமைக்கு எதிரான அறிவின் பகுத்தறிவு ஒளியோ பிறக்காது என்று எவர்தான் பேசிட முடியும்?

"கொள்கை" அடிப்படையை "இரவல் சரக்கு" களாலே அமைக்க விரும்பாமல் கானா நாட்டு நிக்ரூமா, பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தி, புதியதொரு விஞ்ஞான சோஷலிசத்தை -- பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டில்லாமல், ஒழுக்க முதல் வாதத்தை அளவுகோலாக்கிச் சமூகப் பாகுபாடுகள் செய்யப் போவதாக -- உருவாக்கப் போவதாக உலகினுக்கு அறிவித்தார்.

கனவு கனவாகவே முடிந்திருக்கலாம், ஆனால், அந்த உந்துதலின் பின்னுள்ள உணர்வு, 'கொள்கை அடிப்படையை' வலுவாக்க வேண்டும் என்பதேயல்லாமல், 'கொள்கையே தேவையில்லை' எனக் கோமாளி அரசியல் நடத்தும் இங்குள்ள சிலரைப் போன்றதல்ல.

இந்த நிலைமைகள் எல்லாம் இல்லாமல், இன்பத் தமிழகத்திற்கு ஏற்றமளிக்கும் அரசியல், பொருளியல் கொள்கைகளை அதன் அடிப்படையில் அமைந்த அரசியலை பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கி விட்டார்.

அண்ணா உலகத் தலவைராக வேண்டியவர் காலம் அவரை நம்மிடமிருந்து பிரிக்காமல் இருந்திருந்தால்.

அத்தகு உயரிய இலக்கினை -- அண்ணா மலைப் பல்கலைப் கழகப் பேருரையில் பேரறிஞர் அண்ணா எத்துணை அழகுறத் தெரிவிக்கின்றார் தெரியுமா?

கையேந்தி இரந்து நிற்கும் இரவலனே இல்லாத கஞ்ச நெஞ்சனின் இதயமில்லாக் கடும் பார்வை விழாத தேவைகளே இல்லாத குற்றங்களே இல்லாத பொய்மையே இல்லாத பழிப்புரையே கேளாத உலகம்.

உடலாலும், உள்ளத்தாலும் பிணி வயப்படாத இனம் எங்கே வாணாள் நீடிக்குமோ எங்கே அச்சம் மடியுமோ எங்கே இன்பம் சுரக்குமோ எங்கே அன்பு ஆழமாகுமோ அத்தகு புன்னகை பூத்த நிலம் நோக்கிக் குடிசையிலே வாழுகின்ற மனிதனை இட்டுச் செல்லத் துடித்தாரே அண்ணா.

குவலயமே கொள்ளத்தக்க கொள்கை குறிக்கோள் அல்லவா இது.

இத்தகு கொள்கையை ஏந்திய தி.மு. கழகம், அத்தகு வலிவும் பொலிவும் வையத்திற்கே தேவைப்படும் தத்துவமும் கொண்டது என்பதனை அரசியல் வரலாற்றாசிரியர்கள் எழுதும் நாள் தொலைவில் இல்லை.





புதன், 23 செப்டம்பர், 2015

தமிழர் வரலாற்று மறு கட்டமைப்புக்கு நான் உழைக்க. முடியும்.

 புதுவையில் விளையாட்டாக நானும் இருக்கிறேன் அரசியல் மிருகங்களே என்னை இருட்டடிக்க முடியாது. இந்தியன்  எக்ஸ்ப்ரஸில் 52 வாரங்கள் இலக்கியம், வரலாறு, தொல்லியல், இசை, நடனம், ஓவியம், புவி அறிவியல், தமிழரின் உலகப் பரவல், பன்னாட்டு தொல்குடிகளிடம் தமிழ் வேர்கள் பற்றி எழுதி வந்தேன் 2004 முதல் 2005 வரை., அதை நிறுத்தி மகிழ்ந்தீர்கள். 2014 ல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் 10 கட்டுரைகள் எழுதிய போதும் கத்திரிக் கோல் போட்டீர்கள். தேர்தல் சூதாட்டத்தில் நான் பங்கேற்பது இல்லை இருந்தும் ஒரு அரசியல்வாதி எழுதலாமா ? இந்த பொறாமையால் தமிழரின் வரலாற்றுப் பதிவுக்கு நீங்கள் எல்லாம் இருள் திரை போட்ட போது எ. ஜே.கே தொலைக்காட்சி உரிமையாளர் ஜோன்குமார் எனக்கு வாய்ப்பு அளித்தால் 140 வாரங்கள் அறிவியல் அறிவோம் அறிவால் உயர்வோம்  என்ற தலைப்பிலும் வெளியே தெரியாத வரலாறு தலைப்பிலும் பேசினேன். இந்த கை எழுத்துப் படிகளை தொகுப்பாசிரியர் என்று போட்டு நூல்களாக வெளியிட ஒரு பேராசிரியைக்கு அனுமதி அளித்துள்ளேன். இந்த பேச்சுகள் மேலும் ஆராய தூண்டும்  நோக்கில் அமைந்தவை. ஆய்வு அரங்கங்களில் பல பல்கலைக்கழகங்களில் முன்பு எல்லாம் புதுவை பல்கலைக்கழகத்தில் என்னை பேசச் செய்து மகிழ்ந்த எஸ்.வி.நாராயணன், அ.அறிவுநம்பி ,எஸ்.ஆரோக்கியநாதன் , பேராசிரியர் சம்பந்தன் போன்றோர்   உலகின் எந்த பல்கலைக்கழகத்தில் ஆய்வு ஏடு அளிக்க சொன்னாலும் ஓரளவு தமிழர் வரலாற்று மறு கட்டமைப்புக்கு நான் உழைக்க. முடியும்.

வெள்ளி, 15 ஜூன், 2012

பல நாடுகளில் டெசோ வேண்டும் :சண்டே இந்தியனில் நந்திவர்மன்

நந்திவர்மன்,பொதுச்செயலாளர்,திராவிடப் பேரவை



பல ஆண்டுகளாக இணையத்தில் அகில இந்திய டெசோ என்ற பிளாக்கை நடத்திவருகிறேன். இந்திய மண்ணில் புலம்பெயர்ந்த திபெத் அரசு தர்மசாலாவில் இயங்குகிறது. திபெத்திய பாராளுமன்றம் உள்ளது. 2009&ல் இத்தாலியப் பாராளுமன்றத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திபெத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். 267 திபெத்திய ஆதரவுக் குழுக்கள் பல நாடுகளில் செயல்படுகின்றன. 267வது குழுவாக இலங்கையிலேயே ஆதரவுக்குழு இயங்குகிறது.

அதுபோல கலைஞர் மீண்டும் புத்துயிர் ஊட்டிய டெசோ தமிழ்நாட்டில் மட்டுல்ல, உலகின் பல நாடுகளிலும் உருவாக வேண்டும். 1998&ல் டெல்லியில் தோழர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அனைத்துலக ஈழ ஆதரவாளர் மாநாட்டை நடத்தினார். 2006&ல் ஆல் இந்தியா டெசோ என்று உருவாக்கி ஈழப்பிரச்னை பற்றி கண்திறப்புக் கருத்தரங்கம் டெல்லியில் நடத்த திட்டமிட்டோம். நடக்கவில்லை. கடந்த முறை டெசோ தொடக்க மாநாட்டில் மதுரையில் பேசிய கலைஞர் உலக நாடுகளுக்கெல்லாம் ஈழப்பிரச்னையை கொண்டு செல்வோம் என்றார். மீண்டும் புதுப்பிக்கப்படும் டெசோ குறைந்த பட்சம் டெல்லியிலாவது மாநாட்டைக் கூட்டவேண்டும். தமிழ்நாட்டுக் குள்ளேயே மாநாடுகள், போராட்டங்கள் என்று சுருக்கிக்கொள்வது ஈழப் பிரச்னையை இந்தியாவின் பிற மாநிலங்களுக்குப் புரியவைக்காது.

சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா, செக்கோஸ்லாவியா ஆகிய ஒன்றியங்கள் உடைந்தபோது 1994 அளவில் 19 புதிய நாடுகள் பிறந்தன. எஸ்டோனியா, லாட்வியா, லிதுனியா &இழந்த சுதந்தரத்தை மீண்டும் பெற்றன. இந்த நிகழ்வுகளின்போது ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள நாடுகள் ஹெல்சிங்கி மாநாடு கூட்டி புதியதாக உருவாகும் நாடுகளை அங்கீகரிக்க வழிமுறைகள்/வரையறைகள் வகுத்து அதன்படி மேற்சொன்ன நாடுகளை அங்கீகரித்தனர்.

அதே அளவுகோள்படி, 21ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து பல நாடுகளில் பொதுவாக்கெடுப்பு நடத்தி அந்நாடுகளுக்கு சுதந்தரம் கிடைக்கச் செய்த ஐக்கிய நாடுகள் முன், உதாரணப்படி தமிழ் ஈழத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க உலகின் பல நாடுகளில் டெசோ அமைப்பு உருவாக வேண்டும். ஆயுதப் போராட்டம் முடிவுற்றப் பிறகு ஜனநாயக வழிமுறைகளை ஏற்று மக்கள் தேர்வு செய்து அமெரிக்காவிலிருந்து இயங்கும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசையும் இந்தியாவில் இயங்கும் புலம்பெயர்ந்த திபெத்திய அரசையும் உலக நாடுகள் அங்கீகரிக்க டெசோ வாதாட வேண்டும்.

பொது வாக்கெடுப்பு மூலம் நியூஸிலாந்தின் கடைசிக் காலனியான 644 பேர் வாழக்கூடிய அடோல் ஆல் அட்டாஃபுக்கு சுயாட்சி வழங்கிய ஐ.நா. மன்றம் தமிழ் ஈழத்துக்கும், திபெத்துக்கும் வழங்குமாறு டெசோ வலியுறுத்தவேண்டும். கலைஞரின் முயற்சி தமிழ்நாட்டுடன் நிற்கக்கூடாது. அவர் மேற்கொண்டிருக்கும் இந்த டெசோ இப்போதைக்கு காலத்தின் தேவை என்றுதான் நான் கருதுகிறேன். 2009 காலகட்டத்தை மறந்துவிட்டு அடுத்து நடக்கவேண்டியதை யோசியுங்கள்!